திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பவித்ரோற்சவம்.. ஆன்லைன் டிக்கெட் விற்பனை
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் பவித்ரோற்சவத்திற்கான டிக்கெட்டை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று திருப்பதி தேவஸ்தான இணைய முகவரியில், 2,500 ரூபாயை செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 1463-ம் ஆண்டு சாளுவ மல்லைய்யா தேவராஜா எனும் அரசர் இந்த பவித்ரோற்சவ வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தார்.

தெலுங்கில் ஸ்ராவண மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய 3 நாட்களில் இவ்விழா இன்றுவரை ஆகம சாஸ்திரங்களின்படி நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து 157 கல்வெட்டுகள் கோயிலில் பதிக்கப்பட்டுள்ளன. இதனை தோஷ நிவாரண உற்சவம் என்றும் அழைக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும், மற்றும் வருடாந்திர பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக பவித்ரோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பவித்ரோற்சவ உற்வச விழா இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி துவங்கி 10 தேதி வரை நடைபெற உள்ளது.
பவித்ரோற்சவ நாளில் உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். தீப, தூப, கற்பூர ஆரத்தி ஆகிய சமர்ப்பணங்கள் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெறும். இதையடுத்து நெய்வேத்தியம் செலுத்தப்பட்டு யாகசாலையில் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதையொட்டி, நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாளன்று நடைபெறும் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான டிக்கெட்டை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று திருப்பதி தேவஸ்தான இணைய முகவரியில், 2,500 ரூபாயை செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பவித்ரோற்சவத்தில் பங்கேற்க வரும் பக்தர்கள் சேவைக்கான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன், சம்பிரதாய உடை அணிந்து வரவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications