"ஆதார் கார்டு இருந்தால் ரூ.4.8 லட்சம் லோன் கொடுக்கிறாங்களா?" இணையத்தில் பரவிய செய்தி.. PIB விளக்கம்
டெல்லி: ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.4.8 லட்சம் லோன் வழங்கப்படுவதாக இணையத்தில் பிரதமர் மோடி படத்துடன் செய்திப் படம் ஒன்று பரவியது. இந்த தகவலில் உண்மையில்லை எனவும் யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் பிஐபி பேக்ட் செக் தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்ததன் மூலமாக இப்போதெல்லாம் செய்திகள், அரசின் நலத்திட்டங்கள் என எந்த தகவலாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உலகம் எங்கும் பரவி விடுகிறது.
இதனால், மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கின்றன. தகவல்கள் வேகமாக பரவும் அதே நேரத்தில் போலி தகவல்களும் இதற்கு சற்றும் தொய்வு இல்லாமல் வேகமாக பரவுகின்றன.
100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த முக்கிய தகவல்
போலி செய்திகள், போலி தகவல்கள்
பொய்ச்செய்திகள், வதந்திகள், அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தவறான தகவல்கள் என பல்வேறு தகவல்களையும் சிலர் திட்டமிட்டு பரப்புவது உண்மை செய்தியை விட அதிவேகத்தில் பரவி விடுகின்றன. இத்தகைய பொய் செய்திகள் தேவையற்ற சச்சரவுகளுக்கும் வித்திடுவதாய் மாறி விடுகிறது. போலி செய்திகள் மற்றும் போலி தகவல்களை களைவது பெரும் சவாலான ஒன்றாகவே தற்போதைய இணைய உலகில் உள்ளது.
பேக்ட் செக் செய்வதற்காக
இதற்காக மத்திய அரசின் பிஐபி (Press Information Bureau ) பேக்ட் செக் செய்வதற்காக தனது ட்விட்டர் பக்கமும் வைத்துள்ளது. இணையத்தில் பரவும் போலி செய்திகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த பொய்யான தகவல்களை கண்டறிந்து இது உண்மையல்ல என்பதை பிஐபியின் பேக்ட் செக் ட்விட்டர் பக்கம் பகிர்ந்து மக்களுக்கு உண்மைத்தகவல்களை அளித்து வருகிறது.
ஆதார் கார்டு இருந்தால் 5 லட்சம்
அந்த வகையில், ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.4.78 லட்சம் மத்திய அரசு லோன் கொடுப்பதாக ஒரு போலி செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. இந்த தகவலை உண்மை என நம்பிய பலரும் தங்கள் நட்பு வட்டாரத்திற்கும் அதிவேகத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்ற ஆர்வத்தில் இந்த லோனை எப்படி பெறுவது என்பது பற்றி கூட விசாரித்ததாக கூறப்படுகிறது.
பிஐபி பேக்ட் செக் பக்கத்தில் விளக்கம்
இந்த நிலையில், இந்த தகவல்களுடன் இணையத்தில் பரவும் கார்டு உண்மையானது அல்ல..போலியானது என்று பிஐபி பேக்ட் செக் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கார்டு பதிவையும் தனது பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் பிஐபி பேக்ட் செக் ட்விட்டரில் இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையானது அல்ல போலியானது
அதேபோல், இந்த போலியான தகவல்களுடன் வரும் மெசேஜ்களை மக்கள் யாருக்கும் பார்வார்டு செய்ய வேண்டாம் என்றும் யாரிடமும் தனிப்பட்ட நிதி விவரங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டும் மற்றொரு ட்விட் போடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே போலியான தகவல் இணையத்தளத்தில் பரவியிருக்கிறது. அந்த நேரத்திலும் பிஐபி பேக்ட் செக் பக்கத்தில், இது உண்மையானது அல்ல போலியானது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
அகவிலைப்படியின் கூடுதல் தவணை
அதேபோல், அகவிலைப்படியின் கூடுதல் தவணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் ஜூலை 1 ஆம் தேதியிட்டு வழங்கப்பட இருப்பதாகவும் அண்மையில் ஒரு செய்தி பரவியது. இந்த தகவலில் உண்மையில்ல்லை என்றும் நிதி அமைச்சகம் இதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று பிஐபி பேக்ட் செக் அப்போது விளக்கம் அளித்து இருந்தது.
Fact Check
வெளியான செய்தி
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.4.8 லட்சம் லோன் வழங்கப்படுவதாக இணையத்தில் பிரதமர் மோடி படத்துடன் செய்திப் படம் ஒன்று பரவியது.
முடிவு
இந்த செய்தி பொய்யானது ஆகும். பிஐபி பேக்ட் செக் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.