Fact Check: பாத யாத்திரையில் சொகுசு கேரவன்களை பயன்படுத்தும் ராகுல் காந்தி? ஃபோட்டோக்கள் உண்மையா
டெல்லி: ராகுல் காந்தி தனது பாத யாத்திரையில் சொகுசு கேரவன்களை பயன்படுத்துவதாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் புகைப்படங்கள் உடன் பரவி வருகிறது.
காங்கிரஸின் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை சென்று வருகிறார். காஷ்மீரில் தொடங்கும் இந்தப் பேரணி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.
காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தை மேற்கொள்கிறார்.
கருகும் 'காக்கி டவுசர்’.. நாள் குறித்த காங்கிரஸ்! பாஜக-RSS மீது அட்டாக்.. டி சர்ட் பதிவுக்கு பதிலடி
ராகுல் காந்தி
கடந்த வாரம் புதன்கிழமை கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் இந்த பாத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். முதல் நான்கு நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் பல பகுதிகளில் பாத யாத்திரை நடத்திய ராகுல், நேற்று கேரளாவுக்குச் சென்றார். கேரளாவில் அவர் மொத்தம் 19 நாட்கள் பாத யாத்திரை செல்ல உள்ளார். மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக 3500 கிமீ தூரம் ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சொகுசு கேரவன்
ராகுல் காந்தி பாத யாத்திரை தொடர்பாக இணையத்தில் பல தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியும் அவரது நிர்வாகிகளும் சொகுசு கேரவன்களில் தங்குவதாக இணையத்தில் தகவல் பரவியது. மேலும் ராகுல் காந்தி தங்கும் சொகுசு கேரவன்களின் படங்கள் என்றும் இணையத்தில் சில படங்கள் வெளியானது. அது சொகுசு கேரவன்கள் போலவே இருந்தது. சில இந்தி ஊடகங்களும் இது குறித்த தகவல்களை வெளியிட்டு இருந்தன.
உண்மையா
இந்தச் சூழலில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தி தங்கும் சொகுசு கேரவன்கள் என்று பரவும் படங்கள் 2013இல் அந்த மாடல் கேரவன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வெளியிடப்பட்ட படங்கள் ஆகும். ராகுல் தங்கும் சொகுசு கேரவனின் உட்புற படங்கள் என்று பரவும் படங்களும் இந்த படங்கள் தான். இதை அப்போதே பலரும் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர்.
பழைய படம்
அதேபோல கேரவன் பார்க் செய்யப்பட்டு உள்ளது போல இணையத்தில் பரவும் படம், ராகுல் பாத யாத்திரையில் எடுக்கப்பட்ட படங்கள் இல்லை. இவை கடந்த 2019இல் மும்பையைச் சேர்ந்த கேரவன் வாடனை நிறுவனம் வெளியிட்ட படங்கள் ஆகும். மேலும், இது தொடர்பாகக் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷும் விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்தி சொகுசு ஏற்பாடுகளைத் தவிர்க்கச் சொல்லிவிட்டதாகவும் ராகுல் உட்பட அனைவரும் சாதாரண கண்டெய்னர்களிலேயே தங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்க மொத்தம் சுமார் 65 கண்டெய்னர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனது. ராகுல் காந்தி தனியாக ஒரு கண்டெய்னரில் தங்குகிறார். மற்ற தலைவர்கள் கண்டெய்னரை ஷேர் செய்கிறார்கள். இந்த கண்டெய்னர்கள் எல்லாம் மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
எங்கு தங்குகிறார்
மேலும், இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் ஐஎன்சி டிவி என்ற ட்விட்டர் பக்கத்திலும் வீடியோ ஒன்று பகிரப்பட்டு உள்ளது. அதில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எந்த கண்டெய்டர்களில் தங்குகிறார்கள் என்பது காட்டப்பட்டு உள்ளது. மேலும், கண்டெய்னர்களின் உட்புறங்கள் எப்படி உள்ளது என்பது குறித்தும் அதில் விளக்கப்பட்டு உள்ளது.
பொய்
இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் பயன்படுத்துவதும் சொகுசு கேரவன்களின் படங்கள் என்று பரவும் ஃபோட்டோக்கள் பொய் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்தும் கேரவன்கள் தகவலைக் காங்கிரஸே வெளியிட்டு உள்ளது. இவை ராகுல் பயணம் முழுவதும் அவருடன் செல்லும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Fact Check
வெளியான செய்தி
ஒற்றுமை பாத யாத்திரையில் ராகுல் காந்தி சொகுசு கேரவன்களை பயன்படுத்துவதாக ஃபோட்டோக்கள் பரவின.
முடிவு
பழைய படங்களை ராகுல் காந்தியின் சொகுசு கேரவன்கள் படங்கள் என பகிர்ந்து வருகின்றனர்.