மகளை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுங்க... மாணவியின் பெற்றோர்

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை மட்டுமே சரியானதாக அமையும் என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இது குறித்து மாணவியின் தாயார் கூறுகையில், "4 பேரும் எங்கள் மகளிடம் கொடூரமாக நடந்து கொண்டனர். அவர்கள் கடுமையாக தாக்கியதாக, அவள் மரண படுக்கையில் என்னிடம் கூறினாள். அவள் அழுதுகொண்டே சொன்னதை என்னால் மறக்க முடியாது. கடந்த 9 மாதங்களாக எங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக காத்திருந்தோம். இந்த வழக்கை பற்றியே சிந்தித்து வந்தோம். எனவே, அவர்கள் 4 பேரையும் சாகும்வரை தூக்கிலிட வேண்டும்.
அவர்களுக்கு இந்த சமூகத்தில் வாழ தகுதி இல்லை. மரண தண்டனை கொடுத்தால்தான், எங்கள் மகளுக்கு நீதி கிடைத்ததாக அர்த்தம். அவர்கள் எங்கள் மகளிடம் நடந்து கொண்ட விதத்தை என்னால் சொல்ல முடியாது. அதை உலகமே அறியும். இந்த போராட்டத்தில் இந்த நாடே எங்கள் பின்னால் நிற்கிறது" என்றார்.
3 ஆண்டுதான் தண்டனையா?
"இந்த வழக்கில் இளம் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது நாங்கள் நொறுங்கிப்போனோம். அவன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. ஆனாலும், அவனுக்கு வெறும் 3 ஆண்டு சிறைத் தண்டனைதான் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மரண தண்டனைக்கு குறைவான எதுவும் போதுமானது அல்ல.
நாட்டுக்கே வெட்கக்கேடு
இனிமேல் யாரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை செய்யாத வகையில் முன் உதாரணமாக இந்த தண்டனை அமைய வேண்டும். அப்படி மரண தண்டனை கொடுக்கப்படாவிட்டால், அது நாட்டுக்கே வெட்கக்கேடு ஆகும். தண்டனையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த வழக்கு, எங்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதற்கும் முக்கியமானதாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications