4வது காலாண்டில் அதிக ஆட்களை வேலைக்கு எடுக்க திட்டமிடும் இந்திய நிறுவனங்கள்
டெல்லி: இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி காத்திருக்கிறது.
வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்காததால் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதை வெகுவாக குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் சிலரை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மேன்பவர்குரூப் என்ற நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள 5,059 நிறுவனங்கள் மற்றும் 42 நாடுகளைச் சேர்ந்த 65,000 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

நல்ல செய்தி
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான 4வது காலாண்டில் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கப்போவதாக கணக்கெடுப்பில் கலந்து கொண்ட இந்திய நிறுவனங்களில் 41 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் புதிதாக இவ்வளவு ஆட்களை பணியமர்த்த நிறுவனங்கள் திட்டமிடவில்லை.

தைவான்
இந்தியாவை அடுத்து தைவானில் உள்ள நிறுவனங்களில் 31 சதவீத நிறுவனங்கள் புதிதாக ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தாலியில் உள்ள நிறுவனங்களுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை.

எந்தெந்த துறைகள்
தொழில்நுட்பம்(ஐடி), மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம், இ-காமர்ஸ், சுரங்கம், கட்டுமானம், நிதி, இன்சுரன்ஸ், ரியல் எஸ்டேட் துறைகளில் புதிதாக ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படவிருக்கிறார்கள்.

மெதுவாகத் தான்
ஹெட்ஹன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கிரிஷ் லக்ஷ்மிகாந்த் கூறுகையில், வேலை சந்தை பெரும் அடிவாங்கியுள்ளது. அதனால் அது மெல்ல மெல்ல தான் மீண்டு வரும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் மீண்டு வருகிறது. அதனால் ஐடி மற்றும் ஏற்றுமதி வியாபாரம் நிச்சயம் மேம்படும் என்றார்.












Click it and Unblock the Notifications