பெண்ணின் தலையில் எச்சில் துப்பி ஹேர்ஸ்டைல்.. சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட்!
சிகையலங்காரம் செய்த போது பெண்ணின் தலையில் எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப்.
லக்னோ: விழா மேடையில் பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகையலங்காரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கிங் வில்லா ஹோட்டலில் சிகையலங்காரம் குறித்த பயிற்சி வகுப்பு ஒன்று நடைபெற்றது. டெல்லியைச் சேர்ந்த பிரபல சிகையலரங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சிகையலங்காரத் துறையில் இருந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானவர்கள் பெண்கள் ஆவர்.
சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த்
நிகழ்ச்சியின் ஒரு கட்டமாக சிகையலங்கார செய்முறை பயிற்சிக்காக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா குப்தா என்ற பெண்ணை மேடைக்கு அழைத்தார் ஜாவேத். அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் சிகையலங்காரம் செய்து காட்டினார்.
தலையில் எச்சில்
சிகையலங்காரம் செய்து கொண்டே, பார்வையாளர்களுக்கு குறிப்புகள் வழங்கினார் ஜாவேத். அப்போது, "சிகைலயங்காரம் செய்யும் போது அருகில் தண்ணீர் இல்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் எச்சில் துப்பிக் கொள்ளலாம்" எனக் கூறியவாறே, மேடையில் அமரவைக்கப்பட்டிருந்த அப்பெண்ணின் தலை மீது அவர் எச்சில் துப்பியுள்ளார்.
கண்டனம்
ஜாவேத் சிகையலங்காரம் செய்வதை வீடியோவாக பதிவு செய்திருந்தனர். அதில் இக்காட்சிகளும் பதிவானது. இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கடும் விமர்சனங்களிலில் சிக்கியது. பெண்ணிடம் ஜாவேத் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ஜேவேத்திற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது.
போலீசில் புகார்
இதற்கிடையே, சம்பவத்தன்று ஜாவேத்திடம் சிகையலங்காரம் செய்து கொண்ட பூஜா குப்தா, இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர்பூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜாவேத் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தேசிய மகளிர் நல ஆணையம்
அதில், "நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முடிவெட்டுவதாக கூறி ஜாவேத் ஹபீப் என்னை மேடைக்கு அழைத்தார். பின்னர் என் தலையில் எச்சில் துப்பினார். என்னிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொண்டு அவமதித்ததால் அவர் மீது புகார் அளித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வீடியோ மூலம் மன்னிப்பு
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "சம்பந்தப்பட்ட நிகழ்வின் போது பேசிய சில வார்த்தைகள் மக்களை புண்படுத்துவதாக அமைந்து விட்டது. இது போன்ற நிகழ்வுகள் நீண்டதாக இருக்கும் என்பதால், மக்களை மகிழ்விக்க நகைச்சுவைக்காக அப்படி பேசினேன். இருந்த போதிலும், இந்த சம்பவத்தால் நீங்கள் புண்பட்டிருந்தால், என்னை மன்னியுங்கள் என்று என் இதயத்திலிருந்து கேட்டுக் கொள்கிறேன்" என மன்னிப்பு கோரியுள்ளார் ஜாவேத்.