வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எல்லாமே நமக்குச் சாதகமாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் சிக்கல் இல்லைதான். ஆனால் பாதகமான நிகழ்ச்சிகள் ஏற்படாமலே வாழ்க்கை நடத்த யாரால் முடிகிறது? அதை விதி என்று விவரிக்கிறது நமது சமயம். ஆனால் அந்தப் பாதகமான ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குச் சாதகமான ஏதோ ஒன்று இருக்கிறது என்று உறுதியாக எடுத்துக் கொண்டால் இருக்கத்தான் செய்கிறது.
குந்தியின் மகனாய்ப் பிறந்தாலும் வெளி உலகுக்கு விளங்காமல் பிறந்தவன் கர்ணன். துருவாசர் சொன்ன மந்திர பலத்தால் திருமணம் ஆகும் முன்னரே சூரியன் உடன் கலந்து குந்தி பெற்ற பிள்ளை கர்ணன். பெற்ற அன்றே பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள் அவள். கிழட்டுத் தேரோட்டியின் வளர்ப்புப் பிள்ளையானான் அவன். தன் வேலையைத் தன் பிள்ளைக்கு வாங்கித் தர வேண்டும் என்ற அவலமான இந்திய மனோபாவம் அந்தத் தேரோட்டிக்கும் இருந்தது. தேரோட்டக் கற்றுக் கொண்டு அரசனுக்கு ஊழியம் செய்யச் சொன்னான் கிழட்டுத் தந்தை. மறுதலித்தான் மகன். வில்வித்தை கற்று வேந்தன் நிலை பெறுவேன். அரசனை எனக்குத் தேரோட்ட வைப்பேனே ஒழிய நான் தேரோட்டியாக மாட்டேன் என்பது கர்ணனின் கனவு.
எந்தக் குருவிடத்தில் வித்தை கற்பது? குலம் கோத்திரம் தெரியாத ஒருவனுக்கு அரச வித்தைகளை அறிவுறுத்த ஆள் கிடைக்கவில்லை. ராஜ அம்சம் இருந்தாலும் ராஜ வம்சம் இல்லை என்றால் வில் வித்தை கற்க முடியாத ஜாதிக் காலம் அந்தக் காலம். தாய் தகப்பன் பெயர் தெரியாதவன். தொட்டால் வில் பேசும். ஆனால் வில்லாசிரியன் பேச மாட்டானே! அப்பன் பெயர் தெரியாத அனாதையாக அலைந்தான் கர்ணன்.
அவனது நல்ல நேரம் பரசுராமனின் பார்வையில் பட்டான். அவர் அதிசய அந்தணர். ஷத்திரியனுக்கே உரிய வில்வித்தையை ஷத்திரியனுக்குச் சொல்லித் தருவதில்லை என்று முடிவு செய்தவர். பிராமணருக்கு அவசியமில்லாத தனுர் வேதத்தைப் பிராமணருக்கு மட்டுமே போதிப்பேன் என்ற பிடிவாதம் உடையவர்.
சிவந்த மேனி. ஒளியான விழிகள். கல்வியில் ஆர்வம். இத்துடன் இருந்த கர்ணனைக் கண்டதும் பிராமணனாய் இருக்கக் கூடும் என்ற எண்ணத்துடன் வித்தைகளைத் தொடங்கினார். அவனது நல்ல நேரம். நுழைவுத்தாளில் ஜாதி கேட்காமல் அட்மிஷன் நடந்தது. சகல வித்தைகளும் அவனிடம் சரண் புகுந்தன. பரசுராமனின் பிரிய மாணவன் அவருக்குப் பிரியமானவன். கர்ணன் வேகமாக முன்னேறினான்.
அன்றொரு நாள் ... பாடம் நடத்திய களைப்பில் குரு பரசுராமர் மாணவன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார். ஆசிரியருக்கு மாணவன் மேல் அவ்வளவு நம்பிக்கை அப்போது. கர்ணன் அவருக்குக் காற்று வீசிக் கொண்டு கடமை உணர்வுடன் காத்திருந்தான். கர்ணன் அஸ்திர பலம் பெறுவதைப் பெற முடியாத இந்திரன் வண்டு வடிவெடுத்தான். கர்ணன் மடியில் உறங்கும் பரசுராமர் தூக்கம் தடைப்பட வேண்டும். பாதியில் எழுந்து கோபத்தால் அவர் சாபம் கொடுத்து கர்ணன் கல்வி கரைய வேண்டும் என்று எண்ணி இந்திர வண்டு கர்ணன் துடையைத் துளைத்து எடுத்தது. வலியைப் பொறுத்துக் கொண்டிருந்தான் கர்ணன். காலை அசைக்கக் கூட இல்லை. குரு நாதர் தூக்கம் கலையக் கூடாதே என்ற கவலை.
இன்றைக்கு எந்த மாணவனாவது குரு தூக்கம் கலையக் கூடாதே என்று பொறுத்திருப்பானா? இருப்பான். எழுந்து ஆசிரியர் அறுப்பதை விட வண்டு எவ்வளவோ மேல் என்று பொறுத்திருந்தால் உண்டு. இரத்தம் கசிந்து பரசுராமர் உடலை நனைத்தது. தூக்கம் கலைந்து சினந்து எழுந்தார் குருநாதர். குருதி வடியும் கர்ணன் தொடையைக் கண்டார். வண்டு துளைக்கும் வலியால் பாதிக்கப்படாத வதனம் கண்டார். வலியைத் தாங்கும் தேக வளம் கண்டார். கையை உயர்த்தி அலறினார். அடப்பாவி என்னை ஏமாற்றி விட்டாயே? இவ்வளவு துன்பத்தை உன் தேகம் பொறுத்திருக்க வேண்டும் என்றால் நீ அந்தணனாக இருக்க முடியாது. அந்தணருக்குத் தேக பலம் குறைவு. மனோபலம் அதிகம். பொய் சொல்லி கல்வி கற்று விட்டாய்.! நீ ஷத்திரியன். ... ஷத்திரியன்....என்னிடம் கற்ற வித்தை உனக்கு உரிய காலத்தில் பயன்படாமல் போகட்டும் என்று கோபத்தை சாபமாக உருப்பெயர்த்தார்.
எத்தனை பெரிய இழப்பு. கற்ற வித்தை பயன்படாமல் போய்விடும். கர்ணன் கவலைப்படவில்லை. நன்றியுடன் குருவை வணங்கினான். உள்ளே ஒரு மகிழ்ச்சிக்கு மின்னல். சாபத்தில் என்ன சந்தோசம்? நீ ஷத்திரியன் நீ ஷத்திரியன் என்ற வார்த்தைகள் அவனுக்குள் எதிரொலித்தன. குலம், கோத்திரம் எதுவும் தெரியாத என்னை ஷத்திரியன் என்று குரு சொல்லி விட்டார். குருவின் வார்த்தை பொய்யாகாது. என் நெடுநாள் அவலம் இன்றோடு நீங்கியது என்று கர்ணன் மகிழ்ந்தான். அந்த சாபம். அவனுக்கு வரமாக இருந்தது.
அவனது பிறவி எதிரி அர்ச்சுனன். அவனுக்கும் அப்படி ஒரு அனுபவம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோர் எல்லோருமே அப்படித்தான். சாபங்களை வரங்களாக்கும் சாமர்த்தியம் அவர்கள் பிறவிக்குணம். அஸ்திரங்கள் வேண்டி தவம் இருந்தான் அர்ச்சுனன். சூதாடி நாடிழந்த பிறகு காட்டில் இருந்த சமயம் வியாசர் சொன்ன யோசனையால் அவன் தவம் இருந்தான். இந்திரன் தந்தை அல்லவா? மகன் அர்ச்சுனனைச் சோதித்துத் தேர்ந்து வரம் பல வழங்கி சிவனருளைப் பெற்றுத் தந்தான். அதன் பின் இந்திர உலகம் அழைத்துச் சென்று விருந்தினனாகத் தங்க வைத்திருந்தான். இரண்டாவது இந்திரனாக ஒளிவீசிய அர்ச்சுனன் இருந்த சபைக்கு ஊர்வசி வந்து நடனமாடினாள். ஏது கருதியோ அவளை நோக்கினான் அர்ச்சுனன். இந்திரன் தன்னைப்போலவே மகனையும் நினைத்தான். மருவத் துடிக்கிறது மகனது மனம் என்று நினைத்து அருச்சுனன் அரண்மனைக்குச் சென்று தங்கி அவனை அணைந்து மகிழ்வுறுத்தும்படி ஊர்வசிக்கு உத்தரவும் இட்டான். அர்ச்சுனன் பாவையர் பலரை மணந்த மாவீரன் என்று ஊர்வசி உள்ளம் உருகி அவன் இல்லம் வந்தான். என்ன அதிசயம்!
தாயே என்று ஊர்வசி பாதங்களை வணங்கினான் அர்ச்சுனன். மையலால் மனமழிந்து நின்ற ஊர்வசியால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. தந்தை இந்திரனின் காதலுக்கு உரியவள் என்ற முறைமையால் தாயே என்றான். அர்ச்சுனன் நடனக் கலைமீது உள்ள நாட்டத்தால் மட்டுமே அவளை உற்று நோக்கிய உண்மையை உணர்த்தினான்.
பேடியே .. ஆண்மைக்கு அடையாளமாக என்னை அணையாது போல் நடந்து கொண்ட நீ உண்மையில் ஆண்மையற்ற பேடியாகவே ஆகக்கடவாய் என்று தன் ஆற்றாமையால் சாபம் இட்டாள் ஊர்வசி. சாபம் அவன் சரித்திரத்தையே சரிய வைத்ததா? இல்லை. அதையே அவன் வரமாக்கிக் கொண்டான் எப்படி? அந்தச் சாபத்திற்குக் கால எல்லை ஓராண்டு முழுவதும் அந்த சாபத்தைப் பயன்படுத்தி பிருகன்நளை என்ற பெயரில் பேடியாக விளங்கினான் அர்ச்சுனன். அந்தச் சாபம் இல்லை என்றால் அர்ச்சுனனை எப்படி மறைத்து வைக்க முடியும்? நெருப்பை ஒளித்து வைக்க முடியுமா?
கடலுக்கு மூடி போட யாரால் முடியும்? வீரமே உருவான அர்ச்சுனன் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பேடியாக இருக்க முடியும் என்று துரியோதனன் கனவிலும் நினைத்திருக்க முடியாது. அஞ்ஞாதவாசத்தின் வெற்றிக்கு அந்த சாபமே அடிப்படைத் துணை! சாபங்களை வரங்களாக்குவதுதான் சாமர்த்தியமே.
கந்த புராணத்தில் ஒரு காட்சி. நெற்றிக் கண்ணில் இருந்து நெருப்பாகக் குமரன் தோன்றினான். அப்போது உமையம்மை கூட அஞ்சி ஓடினாளாம். அம்பிகை கொலுசிலிருந்து நவ மணிகள் சிந்தின. நவசக்திகளாக அவர்கள் மாறினர். சிவனை விழைந்து நோக்கினர். அவர்கள் அம்பிகை அம்சமாக விளங்கியதால் கண்ணால் கருணை செய்தார் சிவன். கருவுற்றனர். நவசக்திகள். திரும்பி வந்த அம்பிகை இந்தக் கரு உரிய காலத்தில் பிறக்காது. நெடுங்காலம் சுமக்க என்றாள். அதுவும் சாபம்தான். ஆனால் முருகனுக்கேற்ற தம்பியராய் நவவீரர் தோன்ற அதுவே காரணமாயிற்று. உலகின் குறை ஏதும் பாதிக்காது நீண்ட காலம் கருவில் இருந்த நவவீரர்கள் இறைவனையே சிந்தித்து அருள் ஞான வீரராய்த் தோன்றினர். அம்பிகை சாபமே அவர்கள் வரமாயிற்று.
பீஷ்மர் உயர்ந்த பிரம்மச்சாரி என்று கொண்டாடுகிறோம் அது அவருக்குக் கிடைத்த சாபம். எட்டு வசுக்களில் எட்டாவது வசுவாக, பிரபாசன் என்ற பெயரில் இருந்த போது மனைவி பேச்சைக் கேட்டு ஒரு முனிவரது நந்தினி பசுவைத் திருட முனைந்தார். அவர் அடுத்த ஜன்மத்தில் மனைவியே இல்லாமல் வாழ வேண்டும் என்ற சாபம் பெற்றார். அதையே பிரம்மச்சரியம் என்ற வரமாக்கிக் கொண்டார் அவர். பூமி பால் போய்ப்பிற என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சிவன் இட்ட சாபம். தேவாரம் பாடி தலம் தோறும் சிவபெருமானைத் தரிசிக்கலாம் என்பது அவர் மாற்றிய வரம். சாமர்த்தியம் இருந்தால் ஒவ்வொரு சாபமும் ஒவ்வொரு வரமே!