தமிழகத்தில் இன்று
மீண்டும் போராட தேயிலை தொழிலாளர்கள் முடிவு
கோவை:
நீலகிரி மாவட்ட விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல்தங்கள் போராட்டத்தை துவக்க முடிவு செய்துள்ளனர்.
நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தேயிலை பயிரிட்ட சிறுவிவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா சீசன் கடுமையாகப் பாதிப்படைந்தது.மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. அரசு பஸ் எரிக்கப்பட்டது.
இது தவிர நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து போனதால் பெரும் வருவாய் இழப்புஏற்பட்டது. விவசாயிகளை சமாதானப்படுத்த அரசு கிலோ ஒன்றிற்கு ரூ.5 மானியம் வழங்குவதாக அறிவித்தது.
மேலும், பிரச்னைகளை ஆராய ஒரு கமிட்டி ஒன்றையும் அரசு ஏற்படுத்தியது. இந்த கமிட்டி தேயிலைவிவசாயிகளின் பிரச்னையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் பிரச்னை கிளம்பியுள்ளது. எல்லநள்ளியில் ஜூலை 23ம் தேதி , தமிழ்மாநில காங்கிரஸ்மாவட்ட தலைவர் உச்சிகவுடர், போராட்டம் நடத்தப் போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவித்தார்.
இதனால் எல்ல நள்ளியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. சில இடங்களில் சாலை மறியல் செய்யப் போவதாக அவர்அறிவித்தார். இதையடுத்து எல்லநிள்ளி -மேட்டுப்பாளையம் ரோட்டில் விவசாயிகள் கூடினர். கோவை மற்றும்ஈரோடு மாவட்டங்களிலிருந்து போலீஸ் அதிரடிப்படை எல்ல நள்ளிக்கு விரைந்தது.
இந்நிலையில் நிலைமையை சமாளிக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் சிவசங்கரன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைஜூலை 23ம் தேதி அவசர அவசரமாகக் கூட்டி ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசானைக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னையை அரசு உடனடியாகத் தீர்க்க வேண்டும் எனஅனைத்துக் கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினர். மாவட்ட கலெக்டர் சமாதானப்படுத்த முயன்றும், முடிவில்தோல்வியே கிடைத்தது.
இந்தக் கூட்டத்தில் தேயிலைப் பிரச்னைத் தொடர்பாக அமைக்கப்பட்ட போராட்டக் குழுவின் தலைவர் உச்சிகவுடர்பேசியதாவது:
கடந்த 40 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் கடும் பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தீர்க்க அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேயிலை இறக்குமதியை தடைசெய்யவோ,ஏற்றுமதியை அதிகரிக்கவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பிரச்னையை தீர்க்க அரசு உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், திங்கள்கிழமை (ஜூலை24) முதல் போராட்டம் தொடரும் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் வாசு பேசுகையில், நீலகிரி மாவட்ட விவசாயிகள் கடும் போராட்டத்தில்ஈடுபட்டும் எவ்விதப் பலனும் இல்லை. தேயிலை விவசாயிகள் வறுமையில் வாடி வருகின்றனர்.
இவர்களுக்கு போதுமான உணவு, உடை கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டு வருகிறது. தொழிலாளர்கள்வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. குடும்பத்திற்கு இரண்டு பேர் உணவுக்காக ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் செயலர் பெல்லி பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பலர் தற்போது வேறுவேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்குச் சென்றுவேலை தேடி வருகின்றனர். இந்நிலையைத் தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மாவட்ட கலெக்டர் சிவசங்கரன் மற்றும் அரசு கொறடா பாரக் ஆகியோர் அனைத்துக் கட்சித் தலைவர்களிடம்,அரசு விரைவில் விவசாயிகள் பிரச்னை குறித்து முடிவெடுக்கும். எனவே, அவரசரப்பட்டு போராட்டத்தில் இறங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், முதல்வர் கருணாநிதி நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு ஒரு பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார். அதில்,அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அதில், தேயிலை விலையை உயர்த்த அரசு தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மத்தியஅரசிடம் மானியத்தை உயர்த்தவும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மானியத்தை அரசுஅறிவிக்கும்.
நீலகிரித் தேயிலையை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனஎனக் கூறியுள்ளார்.