கருணாநிதி, நெடுமாறன், கோபாலுடன் ராஜ்குமார் மகன்கள் சந்திப்பு
சென்னை:
சென்னையில் ராஜ்குமார் மகன்கள் நெடுமாறனை சந்தித்துப் பேசினர். தந்தையை காப்பாற்ற மீண்டும் காட்டுக்கு தூதுசெல்லும்படி அவரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சந்தன வீரப்பன் பிடியில் சிக்கி காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க தமிழகமும், கர்நாடகமும்இணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இரு மாநில ஆதரவுடன் அரசு தூதராக நக்கீரன் கோபால் 4 முறைதனியாக காட்டுக்குச் சென்று வந்தார்.
ஐந்தாவது முறை அவர் செல்வதற்கு முன்னர் வீரப்பன் புதிய நிபந்தனையை விதித்தான். கோபாலுடன் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன், மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி, சுகுமாரன் ஆகியோரையும்தூதர்களாக அனுப்ப வேண்டும் என்றான்.
அதன்படி நான்கு பேர் கொண்ட புதிய தூதுக்குழு ஐந்தாவது முறையாக காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்தித்தது. தடா கைதிகள்விடுதலையில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சுட்டிக் காட்டி ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் அக்குழுவினர் ஈடுபட்டனர். ஆனால்,பிடிவாதம் தளராத வீரப்பன் ராஜ்குமாரை மட்டும் விடுவிக்க மறுத்து விட்டான். ஆனால், அவரது மருமகன் கோவிந்தராஜூவைவிடுவித்தான்.
இந் நிலையில் தூதுக் குழுவில் நெடுமாறன் இடம் பெற்றதை பலரும் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவிசோனியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான நெடுமாறனை தூதுவாகபயன்படுத்துவது அழகல்ல என்றார். அதையடுத்து நெடுமாறன் காட்டுக்குச் சென்றதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி தான்காரணம் என்று பழியை தமிழக அரசு போட்டு விட்டார் கர்நாடக காங்கிரஸ் முதல்வரான கிருஷ்ணா.
இதற்கு கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக முதல்வர் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதால் தான் நெடுமாறன்காட்டுக்குச் சென்றார் என கருணாநிதி கூறினார்.
இதையடுத்து நெடுமாறன் பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு மாநில அரசுகளையும் கடுமையாக கண்டித்துள்ளது. அதிலும்குறிப்பாக தமிழக அரசின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துள்ளது. ராஜ்குமாருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியது தமிழகஅரசின் மன்னிக்க முடியாத குற்றம் என்று நாட்டின் உயர்ந்த அமைப்பான உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இதனால் தமிழக அரசு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது. ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் தேவையில்லாமல்தலையிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதாக தமிழக அரசு கருதுகிறது.
இச் சூழ்நிலையில் தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் ராஜ்குமார் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத்ராஜ்குமார் ஆகிய மூவரும் சந்தித்தனர். நெடுமாறன் பிரச்சனை, காங்கிரஸ் தலைவி சோனியாவின் குற்றச்சாட்டு, உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பு ஆகியவற்றின் காரணமாக ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் பின்வாங்கிட வேண்டாம் என தமிழகமுதல்வரை அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
ஆனால், அதற்கு முதல்வர் கருணாநிதி உறுதியான பதிலை அளிக்க மறுத்து விட்டார். எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம்;செய்வோம் என்று பட்டும் படாமலும் பதிலளித்து விட்டதாக கோட்டை வட்டாரம் தெரிவித்தது.
இதனால் திருப்தியடையாத ராஜ்குமார் மகன்கள் நேராக நெடுமாறன் வீட்டுக்குச் சென்றனர். அவரை சந்தித்து அரை மணி நேரம்பேசினர். மற்றவர்கள் சொல்வதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் மீண்டும் தூதராக சென்று எங்கள் தந்தையை மீட்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு நிெடுமாறன், எல்லோரும் மீண்டும் கேட்டுக் கொண்டால் நான் தூதராக செல்லத் தயார் என்று உறுதியளித்துள்ளார்.அதனால் ஏற்பட்ட நிம்மதியுடன் ராஜ்குமார் மகன்கள் பிற்பகலில் நக்கீரன் கோபாலையும் சந்தித்துப் பேசினர்.