கோட்டை ஒன்று மிச்சம் உளதே ...
சென்னை:
ஜெயலலிதா பற்றி "சூப்பர் கவிதை ஒன்றை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி எழுதியுள்ளார்.
இந்த கவிதை திமுக நாளிதழான முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
"கோட்டை ஒன்று மிச்சம் உளதே என்ற தலைப்பில் வெளியான கருணாநிதியின் கவிதை இதுதான்:
நாட்டுச் சொத்தெல்லாம் நமக்கே உரிமை என்று
வீட்டுக்குள் சுருட்டி விழுங்கி மகிழ்வதா?
நடுவரது தீர்ப்புக் கேட்டு நடுங்கித்தான் போனார்.
நாலும் கெட்ட பின்னர் நடுக்கம் எதற்காக என்றேன்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் என்று நாவடக்கிப் பேசல் மறந்து நின்றார்.
"அடக்கம், ஆடவர் பெண்டிர்க்கணிகலன் என்றேன்.
மடத்தனமாய் எவரோ கீறிவைத்த கிறுக்கல் என்றார்.
பட்ட பிறகும் புத்தி வர வேண்டாமோ என்றேன்.
முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்றார்.
எத்தனை நாள் தான் ஏமாற்றுவீர் மக்களை என்றேன்.
கொட்டிக் கொடுக்கும் பெட்டிப் பணம் தீரும் வரை என்றார்.
சிலரைச் சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்ற முடியாதே என்றேன். சிங்கத்தைக் கூட அதன் நிழலைக்காட்டி ஏமாற்றிய கதையை
சிறுவர்க்கான பள்ளி நூலில் படித்ததில்லையா என்றார்.
கதையில் கற்பனையில் சிங்கம் சிறுத்தை ஏமாறலாம்.
கனவில் கூட சிறு நரி அவற்றை வீழ்த்தாதே என்றேன்.
வன மோகினிக்கு வசப்படாத சிங்கம் புலிகள் பண மோகினிக்கு பணிவதைப் பார்த்திடுக என்றார்.
ஆறுபத்து கோடியிலே ஆஸ்தி, நூறு கோடியிலே திருமணம், நியாயமா என்றேன். அதனால் தான் ஆலயங்களில்பாவ விமோசனப் பயணம் என்றார்.
கோயில்கள் மன்னிக்கலாம், கோர்ட்டுகள் மன்னிக்காதே என்றேன்.
கொள்கையை நான் மாற்றிக் கொள்ள முடியாதே என்றார்.
தடையுண்டாமே நிற்பதற்கு; தடை மோதி உடைப்பேன் என்றார்.
உண்டென்பார் பலர், இல்லை என்பார் சிலர், எமக்கில்லை அக்கவலை என்றேன்.
நரிக்கு மீண்டுமா நாட்டாண்மை வேண்டும்? என்றேன்.
கிடைக்கு எட்டாடு போதாது இனிப் பதினாறு என்றார்.
தோட்டம், துரவு, ஓட்டல்கள் பல கோடி தொடருதா ஆசை? என்றேன். கோட்டையொன்று மிச்சம் உளதேதெரியாதா என்றார்.