பாரத ரத்னா சி.எஸ். மறைந்தார்
சென்னை:
பாரத ரத்னா விருது பெற்றவரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர கவர்னருமான சி. சுப்ரமணியம் சென்னையில் செவ்வாய்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.
சி.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.சுப்ரமணியம் கடதந்த 1910-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி பொள்ளாச்சியில் பிறந்தார்.சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியலில் பட்டப்படிப்பையும், தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.
காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட அவர் காங்கிரசில் இணைந்தார். 1936 ம் ஆண்டு கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக தன் அரசியல்வாழ்க்கையை அவர் தொடங்கினார். பின்னர் தனது நேர்மையான அரசியலாலும், ஆற்றலாலும் படிப்படியாக உயர்ந்தார். நாடு முழுவதும் அறிந்ததலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
1946-51-ம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் ஜவஹர்லால் நேருதலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக சி.எஸ் பொறுப்பேற்றார். பசுமைப் புரட்சி என்ற புரட்சிகரத் திட்டத்தைகொண்டு வந்து நாடு விவசாய வளம் பெற வழிவகை செய்தார்.
தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக பணியாற்றி பல தொழில் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவந்தார். 1979-80ம் ஆண்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் 93-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநிலகவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.
பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னை வந்தார். அதன் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பொது நிகழ்ச்சிகள்அனைத்திலும ஊழல் ஒழிப்பு குறித்து தவறாமல் குறிப்பிட்டு வந்தார்.
தமிழகத்தில் தி.மு.க.- த.மா.கா. கூட்டணி ஏற்படுவதற்கு பாலமாக இருந்தார். ஜெயலலிதாவையும், அவரது ஊழலையும் கடுமையாக எதிர்த்து வந்தசி.எஸ்., அதற்காக தி.மு.க., - த.மா.கா. கூட்டணி தொடர வேண்டும் என்று பகிரங்கமாக பேசி வந்தார். அவர் கடைசி வரையில் தமிழக காங்கிரஸ்டிரஸ்ட் உறுப்பினராக இருந்து வந்தார்.
தமிழகத்தில் கல்வித்துறைக்கு சி.சுப்ரமணியம் ஆற்றியத் தொண்டுகள் பல. இவர் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி கொடுக்க வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தார்.
மதிய உணவுத் திட்டம், தமிழ் மொழி மூலம் பயிற்றுவித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதிக முயற்சிகள் எடுத்தார்.
அரசியல் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் விருப்பம் கொண்டவர் சி.எஸ். 1990ம் ஆண்டு முதல் பாரதீய வித்யா பவன் தலைவராக இருந்தார்.மெக்ஸிகோவிலிருந்து செயல்படும் கோதுமை மற்றும் மக்காச் சோள ஆய்வுக் கழகத்தின் கவர்னராக இருந்துள்ளார்.
ஐ.நா. சபையின் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்காக ஒருமுறை அவரை ஐ.நா. பொதுச் செயலாளர் அழைத்திருந்தார்.
பல்வேறு புத்தகங்களையும் சி.எஸ்.எழுதியுள்ளார். பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
முதல்வர் இரங்கல்:
சிதம்பரம் சுப்ரமணியம் என்ற முழுப் பெயரை கொண்ட சி.எஸ். மறைவு செய்தி கேட்டு தமிழக முதல்வர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார்மற்றும் பல தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று சி.எஸ்.சுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.