மூப்பனார் சிரித்தால்....
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பை பாட்டாளி மக்கள் கட்சி தான் ஆரம்பித்து வைத்தது. கோபாலபுரத்திலிருந்து அந்தர் பல்டி அடித்து தரையில் காலேபடாமல் போயஸ் தோட்டத்தில் லேண்ட் ஆனார் ராமதாஸ்.
அன்று சூடுபிடித்த தமிழக தேர்தல் கூட்டணி சர்க்கஸ் இப்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
பா.ம.க. விலகியதால் ஏற்பட்ட பெரும் ஓட்டையை அடைக்க தி.மு.க. கூட்டணி படாதபாடு பட்டு வருகிறது. இதுவரை மூப்பனாரையும், தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியையும் கேலியும் கிண்டலும் செய்து வந்த தி.மு.க. இப்போது எப்படியாவது அந்தக் கட்சியை தன் பக்கம் இழுத்துவிட துடிக்கிறது.
ஆனால் கோர்ட், கேஸ் என ரொம்பவே பிஸியாக இருந்தாலும் ஜெயலலிதா மிக நேர்த்தியாக அரசியல் காய்களை நகர்த்தி விட்டார். முதலில் மூப்பனாரைதன் பக்கம் இழுத்த ஜெயலலலிதா பிறகு ராமதாஸையும் நண்பராக்கிக் கொண்டு விட்டார்.
ராமதாஸை தன்னுடன் தேர்தல் கூட்டணிக்கே கூட வரச் செய்து விட்டார். மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிசுடனும் எப்படியாவது கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார்.
ஆனால், மூப்பனார் எப்போதும் போல் மகா அமைதி காத்து வருகிறார். முதலில் மூன்றாவது அணி, மதசார்பற்ற அணி என்றெல்லாம் பேசி வந்தமூப்பனார் இப்போது தனது கட்சிக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டைப் பார்த்து கொஞ்சம் தெம்பாகவே வலம் வருகிறார்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு தரப்பிலும் மூப்பனாரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் நடக்கின்றன. தி.மு.க-த.மா.காவை சேர்த்து வைத்தரஜினிகாந்த் இப்போது அரசியல் பக்கமே திரும்பிப் பார்க்காமல் ஒதுங்கிக் கொண்டு விட்டார்.
இது தவிர கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தி.மு.கவுக்கும் த.மா.கவுக்கும் பல மோதல்கள் நடந்து முடிந்துள்ளன. குறிப்பாக சென்னைமாநகராட்சியில் கருணாநிதியின் மகன் மேயர் ஸ்டாலினுக்கு த.மா.கா. பெரும் அரசியல் நெருக்கடி தந்தது. மாநகராட்சியில் ஆளும் கட்சியின் ஊழல்களைஎதிர்த்து த.மா.கா. நடத்திய போராட்டங்களுக்கு நல்ல பெயரும் கிடைத்துள்ளது.
சட்டப்பேரவையிலும் த.மா.கா.-தி.மு.க மோதல் புதிய அத்தியாயத்தை எட்டியது. மூப்பனாரை தி.மு.க வின் இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்கள் மிக மட்டமாக விமர்சித்து வந்தனர். மூப்பனாரை இதையெல்லாம் தனது நண்பர் கருணாநிதிக்காக பொறுத்துக் கொண்டாலும்கட்சியினரிடையே இது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
தனது தொண்டர்களின் மன நிலையைப் புரிந்து கொண்ட பின்னர் தான் ஜெயலலிதாவுடன் நெருக்கமானார் மூப்பனார்.
இப்போது மூப்பனார் எடுக்கும் முடிவை தமிழகமே ஆவலோடு எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
யார் அதிக இடம் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டு என த.மா.கா. முடிவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தான் 40 இடம் தரத்தயார் என கருணாநிதி அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ள ஜெயலலிதாவால் தமிழ் மாநிலகாங்கிரசுக்கு 40 இடம் தர முடியுமா என்பது கேள்விக்குறி தான். இதனால் தான் கருணாநிதி தனது பரந்த மனதை காட்டி 40 இடம் தருவதாகஅறிவித்துள்ளார்.
ஆனால், எப்பாடு பட்டாவது தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நெருக்குதலில் உள்ள ஜெயலலிதா மூப்பனாருக்கு 45 இடம் கொடுத்தாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என ஜெயலலிதா கூறி வருகிறார்.இதனால், கூட்டணியில் த.மா.கவை விட குறைந்த இடங்களே கிடைத்தாலும் பா.ம.கா. அதை பெரிதுபடுத்தாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளும்என்று தான் தெரிகிறது.
காங்கிரசின் நிலைமை தான் படுமோசம். எத்தனை தூதர்கள் எத்தனை முறை ஜெயலலிதாவை சந்தித்தாலும் 5 இடங்களுக்கு மேல் அந்தக் கட்சிக்குக்கிடைக்குமா என்பது சந்தேகமே.
அ.தி.மு.கவுடன் கூட்டணிக்கு த.மா.காங்கிரசில் பரவலான ஆதரவு இருந்தாலும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார். ஆனால், இந்த எதிர்ப்பை மூப்பனார் அலட்சியப்படுத்தி விடுவார் என்று தான் தோன்றுகிறது.
மூப்பனாரை தி.மு.க. சார்பில் நடிகர் சரத்குமார் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மூப்பனார் ஒரு மர்மப் புன்னகையைத்தான் அவருக்கு பதிலாகக் கொடுத்துள்ளார்.
மோனலிசாவின் புன்னகைக்குக் கூட அர்த்தம் கண்டு பிடித்துவிடலாம், ஆனால், மூப்பனாரின் புன்னகைக்கு என்ன அர்த்தமோ?