பழிவாங்கும் வாய்ப்பு: இந்த முறை யாருக்கு?
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவரும் தற்போதையதமிழக முதல்வருமான கருணாநிதிக்கும் இடையே நடைபெறும் அரசியல் போர் எப்போதும் தொடரத்தான்போகிறது.
ஆனாலும் பழிவாங்கும் வாய்ப்பு இந்த முறை யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பது 2 நாட்களில்நடைபெறவிருக்கும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
1991ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால், அனுதாப ஓட்டுக்களைவைத்தே வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்தார் ஜெயலலிதா.
அத்தேர்தலில் திமுகவின் சார்பில் கருணாநிதி மட்டும்தான் வெற்றி பெற்றார். ஆனாலும் எம்எல்ஏ பதவியை உடனேதுறந்து விட்டார்.
அதன் பிறகு, 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி செய்த விதம் அனைவருக்கும் தெரிந்ததே. யாரும்மறக்க முடியாததாகவும் அவருடைய ஆட்சி இருந்தது.
அந்த 5 ஆண்டுகளும் அவர் புரிந்த அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற கொள்கையுடன் 1996ஆம்ஆண்டு களத்தில் இறங்கிய திமுக, சொன்னது போலவே பெருவாரியான வெற்றியையும் பெற்றது. ஆட்சியையும்அமைத்தது.
கும்பகோணம் மகாமகச் சம்பவம், டான்சி ஊழல் வழக்கு, ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடி கோடியாகச் சேர்த்தது,வளர்ப்பு மகனின் பிரம்மாண்டமான திருமணம், உடல் நிறைய நகைகள், வீடு நிறைய செருப்புகள் உள்படஏராளமான சம்பவங்கள் திமுகவுக்குக் கைகொடுத்தன.
இது போதாதென்று, அதிமுக கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமாகாவைத்தொடங்கிய மூப்பனார், ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அதிமுகவைமுழுவதுமாக ஓரங்கட்டி, திமுக ஆட்சியில் அமரப் பெரிதும் உதவி செய்தனர்.
அரியணை ஏறியவுடன், தமது பழிவாங்கும் படலத்தைத் தடபுடலாக ஆரம்பித்தது திமுக அரசு. டான்சி நில வழக்கு,கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு, இலவச வேட்டி சேலை வழக்கு, கலர் டிவி வழக்கு என்று ஏகப்பட்டவழக்குகளை ஜெயலலிதாவின் மேல் தொடர்ந்தது.
பல வழக்குகளில் தண்டனைகளையும் வாங்கிக் கொடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா சிறையிலும் அடைக்கப்பட்டார். 78 நாட்கள் சிறைவாசம் மேற்கொண்டிருந்தஜெயலலிதா, எப்படியோ ஜாமீன் வாங்கி வெளியே வந்தார்.
அதற்கு அப்புறம் மேல்முறையீடு, கீழ்முறையீடு என்று மேலும் பல தண்டனைகள் வாங்காமல் தப்பித்து வந்தாலும்,சில வழக்குகளில் அவருக்குத் தண்டனை கிடைத்தது. அதற்கும் அவர் அப்பீல் வாங்கிவிட, வழக்குகள் அனைத்தும்இன்றும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இதோ தேர்தலும் வந்துவிட்டது.
வாய்ப்பை நழுவ விடுவாரா ஜெயலலிதா? இந்தத் தேர்தல் மூலம் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்து,அனைத்து வழக்குகளிலும் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் முழு மூச்சாக இருக்கிறார்.
தமாகா, பாமக, கம்யூனிஸ்டு என்று முக்கியமான வாக்கு வங்கிகளையெல்லாம் கைவசம் வைத்துக் கொண்டுகூட்டணி அமைத்துவிட்டார்.
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், தானே முதல்வர் என்ற பெரும் கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைஆரம்பித்தார் ஜெயலலிதா.
ஆனாலும் அவருக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டுவிட்டது. தான் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்த ஆண்டிப்பட்டி,கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள்நிராகரிக்கப்பட்டன.
தன்னுடைய மகன் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்பதற்காகக் கருணாநிதிதான் சதி செய்துவிட்டார்என்ற அடுத்த கோஷமும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துவிட்டது.
இந்த அனுதாப அலையில் நிச்சயம்சிக்கிக் கொண்டு, தனக்குத்தான் எப்படியும் தமிழக மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
2 தொகுதிகளுக்குமேல் வேட்புமனுத் தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிந்தும் 4 தொகுதிகளில் மனுத்தாக்கல்செய்ய நாங்களா சொன்னோம் என்றும், முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா செய்த பல ஊழல்களையும்,அதிமுகவின் அராஜகச் செயல்களையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார் கருணாநிதி.
பாலங்கள் கட்டியது, உழவர் சந்தை அமைத்தது, சமத்துவபுரங்கள் உருவாக்கியது போன்ற பல சாதனைகள்திமுகவின் வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.
தேசிய முன்னணியில் பங்கு வகித்திருப்பதும், சின்னஞ்சிறு ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதும்திமுகவின் ஒரு மிகப் பெரும் பலம் என்று கூறலாம்.
ஆனாலும் தற்போது நடைபெற்றுள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்குப் பாதகத்தையேகொடுத்துக் கொண்டு வருகின்றன.
திமுகவிற்கு ஏற்பட்ட இந்தப் பாதகமும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற கருத்துக் கணிப்பும்அதிமுகவினருக்கு ஏகப்பட்ட உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன.
தேர்தலுக்கு முன் சாதகங்களும் பாதகங்களும் தங்களுடைய முடிவுகளை எப்படிக் கூறினாலும், தேர்தலன்று மக்கள்அளிக்கவிருக்கும் முடிவுகளைப் பொறுத்தே யாரை யார் பழி வாங்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.