மக்களை குழப்பும் சன் - ஜெயா வீடியோ காட்சிகள்
சென்னை:
கருணாநிதி கைது விவகாரத்தில் சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.அது உச்சகட்டமாக அடிதடியாக மாறி வருகிறது. இவர்கள் காட்டும் வீடியோ காட்சிகள் மக்களையும் குழப்பிவருகிறது.
இது குறித்து ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு அவரது தொலைபேசி நம்பர்களை கொடுத்தது சன்டிவி. உடனே ஜெயா டிவி தன் பங்கிற்கு கருணாநிதியின் தொலைபேசி நம்பர்களை கொடுத்து ஏன் கிருஷ்ணா நீர்சென்னைக்கு வரவில்லை என கருணாநிதியிடம் கேள்வி கேளுங்கள் என மக்களை தூண்டிவிட்டது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவங்களை படம் பிடித்த சன் டிவி அதை திரும்பதிரும்ப போட்டுக் காட்டியது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஜெயா டிவி கருணாநிதியை கைது செய்யநதற்காக அங்கு சென்ற போலீஸ்அதிகாரிகளை தனது டிவியில் பேட்டி அளிக்க வைத்தது. ஆனால் அது எதிர்பார்த்த பலனை தரவில்லை.
2 நாட்கள் கடந்த பின் போலீசார் எடுத்த வீடியோ கேசட்டுகளை பத்திரிக்கையாளர்களுக்கு அளிப்பது போன்றதோற்றத்துடன் ஜெயா டிவியும் வீடியோ போரில் குதித்தது.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது தங்களுக்கு எந்தெந்த காட்சிகள் சாதகமாக இருந்ததோ அதை மட்டும் சன்டிவி பாணியில் தனது டிவியின் மூலம் நேரம் கிடைத்த போதெல்லாம் ஜெயா டிவி காட்டி வந்தது.
சன் டிவியையும், ஜெயா டிவியையும் பார்த்த மக்கள் எது உண்மை என தெரியாமல் குழம்பி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களும் 2 அணியாக பிரிந்து நிற்கின்றனர்.
ராஜாத்தி அம்மாளின் தாயார் சிவபாக்கியம் இறந்த போது அதை படம் பிடிக்கச் சென்ற ஜெயா டிவி நிருபர்கடுமையாக தாக்கப்பட்டார். இது பற்றி அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புதன்கிழமை நடந்த சென்னை கார்ப்ரேஷன் மன்ற கூட்டத்திலும் மோதல் வந்தது. முன்னர் மோதல் வந்த போதுமுரசொலியின் நிருபர் தாக்கப்பட்டார். அவர் இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் போலீசார் இந்த புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) மட்டும் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை.
ஏற்கனவே ஒரு பத்திரிக்கையாளரை கைது செய்துவிட்டு பிரச்சனையில் சிக்கிக் கொண்டதால் போலீசார் யார்மீதாவது நடவடிக்கை எடுத்தால் மேலும் பிரச்சனை ஏதாவது உருவாகி விட்டால் என்ன செய்வது என்பதால்,நடவடிக்கை எடுப்பது குறித்து யோசனையில் இருக்கிறார்கள்.
வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் கூறுகையில், பத்திரிக்கையாளர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆகிக் கொண்டு வழக்கை வாபஸ்வாங்கிக் கொண்டால் நாங்கள் மறுப்பு ஒன்றும் சொல்லப்போவதில்லை. இல்லை என்றால், புகாரின் அடிப்படிையில்சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்றார்.
சன் டி.வி. வழக்கு போட்டால் சந்திக்க தயார்: முத்துக்கருப்பன்:
"கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவங்களை ஒளிபரப்பக்ககூடாது என்று நான் சன் டிவிக்குநோட்டீஸ் அனுப்பியது சட்டத்திற்கு உட்பட்டுத்தான். இதற்காக சன் டிவி என் மீது வழக்கு தொடர்ந்தால் அதைசட்டபூர்வமாக சந்திப்பேன்" என்றார் முத்துக்கருப்பன்.