தலைவர்களின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள் - ஜெ. வேண்டுகோள்
சென்னை:
அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரிக்க வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு,அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறிக்கச் செய்யும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடந்த போராட்டங்களின்போது, பிரதமர் வாஜ்பாயின் உருவ பொம்மைகளைஅதிமுகவினர் எரித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறியே, இந்த உருவபொம்மை எரிப்புப் போராட்டங்களையும் அதிமுக நடத்தி வருகிறது.
இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுகவின் இத்தகையபோராட்டப் போக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாஜக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று பாஜககூறியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை நடந்த வாஜ்பாய் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தின்போது,20க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டது. இவர்களில் சில பெண்களும் அடங்குவர்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அதிமுக தொண்டர்களின் உயிர் விலை மதிக்க முடியாதது. தீக்காயம் பட்ட அதிமுக தொண்டர்கள் குறித்து, நான்மிகுந்த துயரம் அடைந்துள்ளேன்.
அதனால் இனிமேல் யாரும் அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்
மேலும், தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சிதான். விரைவில் வழக்குகளில் வென்று,நிரபராதி என்று என்னை நிரூபித்து, மீண்டும் தமிழக முதல்வராவேன்.
அதுவரை தயவு செய்து அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தன் தொண்டர்களிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயலலிதா.