தலைமையின் நிதானம் .. சோகத்தில் திமுக தொண்டர்கள்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை அதிக ஆர்வம் காட்டாமல் மெளனமாக இருப்பது கட்சித் தொண்டர்களிடையே சோர்வைஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடக்கிறதா என்று ஆச்சரியம் எழும் அளவிற்கு ஒரு மயான அமைதி நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடிக்காததற்குக் காரணம் இரண்டு. ஒன்று ஜெயலலிதா, இன்னொன்று கருணாநிதி.
இந்த இரு பெரும் தலைவர்களும் இன்னும் தங்களது தேர்தல் பிரசாரத்தைத் துவக்கவில்லை. இருவரும் பிரச்சாரத்திற்கு செல்வார்களாஎன்பதே கேள்விக்குரியாக உள்ளது. இதன் காரணமாக இரு கட்சித் தொண்டர்களும் சோர்வுடன் உள்ளனர். குறிப்பாக திமுகவினர் கடும்சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திமுகவைப் பொருத்தவரை சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்குப் பிறகு வரும் தேர்தல் இது. சட்டசபைத் தேர்தலுக்குப்பிறகு இக்கட்சிக்கு மக்கள் மத்தியில் அனுதாபம், ஆதரவு ஏற்படும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதை வைத்து எளிதாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அந்தநம்பிக்கையை வெற்றியாக மாற்ற திமுக தலைவர்களின் தீவிர பிரசாரம் கண்டிப்பாக தேவை என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், தலைவர் கருணாநிதியோ பிரசாரத்திற்கு வர மாட்டேன், ஓரிரண்டு இடங்களுக்கு மட்டுமே வருவேன் என்று கூறி விட்டார்.
கருணாநிதியின் அறிவிப்பு குக்கிராமங்களில் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மனச் சோர்வைக் கொடுத்துள்ளது.கருணாநிதியின் தற்போதைய திட்டப்படி 6 மாநகராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் பிரசாரம் செய்யச் செல்வார் என்று கூறப்படுகிறது.
அதிலும் கூட மாற்றம் செய்யப்பட்டு 4 மாநகராட்சிகளுக்கு மட்டும் (சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை) அவர் செல்லலாம் என்றும் ஒருதகவல் உள்ளது.
திமுக தலைமை இதுபோல அலட்சியமாக இருப்பது தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் என்றால்உயிரைக் கொடுத்து பிரசாரம் செய்யும் திமுக தலைமை உள்ளாட்சித் தேர்தல் என்றால் இப்படி சுணங்கிப் போவது சரியல்ல என்று அவர்கள்நினைக்கிறார்கள்.
இன்னும் சிலரோ, உள்ளாட்சித் தேர்தலால் கருணாநிதிக்கோ அல்லது ஸ்டாலினுக்கோ அல்லது கருணாநிதியைச் சுற்றி உள்ள சில இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கோ எந்தப் பலனும் இல்லை. இதனால் தான் அவர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள்.
திமுக தரப்பில் இதுவரை பெரிய அளவில் யாரும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அன்பழகன் இன்னும் தனது பிரசாரத்தைத் துவக்கவில்லை.பிற தலைவர்களும் இன்னும் ஈடுபடவில்லை. ஸ்டாலின் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். அதுவும் சென்னையில்தான் அவர் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
பிரசாரம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் திமுக தலைவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை எப்படிப்பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்று திமுக தவிர கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேசமயத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகபிரசாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
திமுக தொண்டர்களின் நிலைமை இப்படி இருக்க சென்னை மாநகராட்சித் தேர்தல் நிலவரம் திமுகவினருக்கு மனதில் கலவரத்தைஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினே மீண்டும் போட்டியிட்டால் மட்டுமே நிச்சயம் திமுகவுக்கு வெற்றி என்று கருதித்தான் ஸ்டாலின் மீண்டும்நிறுத்தி வைக்கப்பட்டார். ஆனால் தேர்தல் பிரசாரத்தைப் பார்த்தால் திமுகவினருக்குப் பயமாக இருக்கிறதாம்.
அதிமுக வேட்பாளர் பாலகங்கா புயல் என சுழன்று பிரசாரம் செய்து வருகிறார். தடபுடலாக அவர் செய்து வரும் அதிரடிப் பிரசாரத்தால்திமுகவினர் ஆடிப் போயுள்ளனர். பாலகங்கா போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் வருகிறதாம் (ஆனால் அவர் அதிகமாக இதுவரைபிரசாரம் செய்துள்ளது வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது, தென்சென்னையில்ஸ்டாலினுக்கு பலம் ஜாஸ்தி). இது திமுகவினருக்குக் கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
மேலும், ஸ்டாலினும் பிரசாரத்தின்போது சுருதி குறைந்தவராகத்தான் காணப்படுகிறார். பிரசாரத்திலும் ஆடம்பரமோ, அட்டாகசமோஇல்லை. கூட்டமும் அதிகம் இல்லை. மிகவும் அடக்கமான பிரசாரத்தை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.