வைகோவை கைது செய்ய வீரமணி எதிர்ப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்து தேவையற்ற அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளவேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணிஎச்சரித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ள வைகோவோ அல்லது மதிமுகவினரோ நாட்டின் ஒற்றுமைக்குப்பாதகம் விளைவிக்கும் வகையில் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.
ஆனால் வைகோ தலைமையிலான மதிமுகவினர் இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள்.வன்முறையில் அவர்களுக்கு நம்பிக்கையும் கிடையாது.
அவ்வாறு ஏதாவது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால் தான் அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கைஎடுக்கலாம்.
அதை விட்டு விட்டு தேவையில்லாமல் பொடா சட்டத்தின் கீழ் வைகோவைக் கைது செய்வது நல்லதல்ல. வெறும்எச்சரிக்கை செய்வதோடு தமிழக அரசு இதை நிறுத்திக் கொள்ளலாம்.
வைகோவைக் கைது செய்தால் தேவையில்லாத அரசியல் சர்ச்சைகள் உருவாகும். அவரைக் கைது செய்தால் அதன்பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டால் அதை வைத்து மத்திய அரசு கடுமையானநடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கும். இந்தப் பிரச்சனையில் ஏன் தமிழக அரசு சிக்கிக் கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.
தேவையில்லாத இந்தப் பிரச்சனைக்காகச் செலவழிக்கப்படும் சக்தியை தமிழக மக்களின் நலத் திட்டங்களுக்குச்செலவழிக்கலாம் என்றும் தமிழக அரசுக்கு வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மேற்கொள்ளும் செயல்களை எல்லாம் இதுவரை ஆதரித்துப் பேசி வந்தவீரமணி இவ்விஷயத்தில் முரண்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.க. பிரமுகருக்கு 14 நாள் காவல்:
இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாகப் பேசி புதுக்கோட்டையில் நேற்று கைது செய்யப்பட்ட தி.க. பிரமுகரானபாவாணன் இன்று கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசார் விசாரணைக்குப் பிறகு இன்று காலை கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்திற்கு பாவாணன் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அந்த நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் சென்று விட்டதால், அவர் சத்தியமங்கலம்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த சத்தியமங்கலம் நீதிபதி பி. சுப்பிரமணியம், பாவாணனை 14 நாள் காவலில் வைக்கஉத்தரவிட்டார். இதையடுத்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் பாவாணன் அடைக்கப்பட்டார்.
முன்னதாக பாவாணன் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்குத் தமிழகஅரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.