தமிழகத்தில் மீண்டும் வேரூன்ற காங். தீவிர முயற்சி
சென்னை:
பல மாநிலங்களில் படிப்படியாக ஆட்சியைப் பிடித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் மீண்டும் உறுதியாகவேரூன்ற காங்கிரஸ் கட்சி பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இது அவ்வளவு சாதாரணகாரியமாக இருக்கப் போவதில்லை.
வரும் 2004ல் லோக் சபா தேர்தல் நடைபெற உள்ளது. அத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது காங்கிரஸ்.
சோனியாவின் பலம்:
பல்வேறு லாப-நஷ்டங்கள், கோப-தாபங்களுக்கிடையே சோனியாவும் இந்திய அரசியலில் வெற்றி நடை போட்டுவருகிறார். தானே நேரடியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரசைஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.
இன்று அதிக மாநிலங்களை ஆளும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். 14 மாநிலங்கள் அக் கட்சியின் வசம் உள்ளன.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் இருப்பதால் காஷ்மீருக்கெல்லாம் போக வேண்டாம் என்றுகாங்கிரஸ் கட்சியினரே கூறியும் கூட, அங்கு சமீபத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்தார். தற்போது வெற்றி பெற்றுஅங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் அமைக்க உதவியுள்ளார்.
தமிழகம் நோக்கி...:
இந்த நிலையில் தான் காங்கிரஸ் மேலிடம் தன்னுடைய முழுப் பார்வையையும் தற்போது தமிழகத்தின் மீதுசெலுத்தியுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில்திராவிட ஆட்சி தான் நடந்து வருகிறது.
பல முறை இந்த திராவிடக் கட்சிகளுடன் (திமுக, அதிமுக) கூட்டணி வைத்து அந்தக் கட்சிகளையே ஆட்சியில்அமர வைப்பதற்குப் பெரிதும் உதவிய காங்கிரஸ் கட்சியால் இனி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியாதுஎன்ற நிலை ஏற்பட்டது.
"தனிக் குடித்தனம்" சென்றவர்கள்:
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் உடைய ஆரம்பித்தது. கடந்த 1996ம் ஆண்டுதமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக இருந்த மூப்பனார் பிரிந்துவந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியை உருவாக்கினார்.
திமுகவுடன் அப்போது கூட்டணி வைத்த தமாகா, வெற்றிகளையும் குவிக்க ஆரம்பித்தது. தான் போட்டியிட்ட 20எம்.பி. தொகுதிகளையும் தமாகா வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மத்தியிலும் கூட ஐக்கிய முன்னணி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அளவுக்கு தமாகாமளமளவென்று வளர்ந்தது.
அதன் பின்னர் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்குத் தாவியதுதமாகா. அதற்கு முன்னதாகவே திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டித்து விட்டது.
இதைக் கடுமையாக எதிர்த்த தமாகாவின் முன்னணித் தலைவராக இருந்த ப. சிதம்பரம், அக்கட்சியிலிருந்து விலகிகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, பின்னர் அதைக் கட்சியாகவே தற்போது நடத்திவருகிறார்.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் தமிழக ராஜிவ் காங்கிரஸ்கட்சியை உருவாக்கினார்.
தோல்விகளும் வெற்றிகளும்:
கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் மயிரிழையில் தோற்றது காங்கிரஸ்.
அப்போது தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால் எந்த ஒருகட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனியாகப் போட்டியிட்டதே தமிழக காங்கிரசுக்கு பெரிய விஷயமாகப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 1999ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டு எம்.பி. தொகுதிகளை மட்டுமேகாங்கிரஸ் கைப்பற்றியது.
இதன் பின்னர் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவித்தது காங்கிரஸ்.இதனால் நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.
இதையடுத்து இந்த மெல்லிய நூலைப் பிடித்துக் கொண்டே காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் வேலையைகட்சியின் மேலிடம் அமைதியாகவும், நிதானமாகவும் கவனித்து வந்தது.
இணைந்த கட்சிகள்:
இந்த நிலையில் பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் இழுக்க ஆரம்பித்தது காங்கிரஸ். தா.மா.காவை மீண்டும்உள்ளே இழுத்தது.
தமாகா இணைவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே வாழப்பாடி ராமமூர்த்தி தன்னுடைய தமிழக ராஜிவ்காங்கிரசை கலைத்து விட்டு காங்கிரசுடன் மீண்டும் சேர்ந்து விட்டார். பெரிய பெரிய பதவிகள் கிடைக்கும் என்றுஎதிர்பார்த்த அவருக்கு, சமீபத்தில் அவர் இறக்கும் வரை எந்தப் பதவியையும் காங்கிரஸ் அளிக்கவில்லை.
இதற்கிடையே காங்கிரசிலிருந்து பிரிந்து போன சிதம்பரமும் காங்கிரசின் குறியில் தற்போது முழுமையாகச்சிக்கியுள்ளார். காங்கிரசில் இணைவது பற்றி அதி தீவிரமாக அவர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.ரஜினியை நம்பி காத்திருந்து வெறுத்துப் போய்விட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
வரும் டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்த நாளன்று ரஜினி ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடாவிட்டால்காங்கிரஸ் பக்கமாக சிதம்பரம் நகர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசின் திட்டங்கள்:
தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறோமோ, இல்லையோ அதற்கு முன்பாக 2004ல் நடைபெறும்லோக்சபா தேர்தலில் தமிழக எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றும் வேலைகளை இப்போதே காங்கிரஸ் தொடங்கிவிட்டது.
தமிழகத்தை 10 பிரிவுகளாக்கி ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மத்திய பார்வையாளரை நியமிக்க காங்கிரஸ்திட்டமிட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரிபோன்ற மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் இடைவிடாத சுற்றுப் பயணம்மேற்கொள்ளவுள்ளனர். இவர்களுக்கு உதவியாக 12 துணைத் தலைவர்களையும், 12 பொதுச் செயலாளர்களையும்,12 செயலாளர்களையும், 12 இணைச் செயலாளர்களையும் கொண்ட குழுக்களையும் உருவாக்க காங்கிரஸ்தலைமை திட்டமிட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து சட்டசபைத் தொகுதிகளையும் கவனித்துக் கொள்ளும்படி 55 தனிப்பிரிவுகளும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடும் என்றுகூறப்படுகிறது.
14 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால் காங்கிரசுக்கு பணப் பஞ்சமும் இல்லை. தமிழகத்தில் ஒரு கை பார்க்கதீவிரமாக இறங்க உள்ளது காங்கிரஸ்.
செயல் தலைவர்:
கட்சி வளர்ச்சியில் இளங்கோவன் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக சோனியா கருதுகிறார். இதனால்தான் வாசனின் எதிர்ப்பையும் மீறி அவருக்கு "காங்கிரஸ் செயல் தலைவர்" பதவியைத் தந்தார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் காங்கிரஸ் என்றாலே வயதான பெரியவர்களின் கட்சி என்ற கருத்துத் தான்தமிழகத்தில் நிலவுகிறது. இந்த இமேஜை அக் கட்சி எப்படி உடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.
அதைவிடப் பெரிய பிரச்சனை கோஷ்டிகள். கட்சியில் உள்ள உறுப்பினர்களைவிட கோஷ்டிகளின் எண்ணிக்கைஅதிகம் என்பதால் அதைக் கட்டுப்படுத்தாமல் காங்கிரஸ் எந்த வெற்றியும் பெற்றுவிட முடியாது.
ஆனால், சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி என ராஜிவின் வாரிசுகளைக் காட்டி தமிழக மக்களை வசியப்படுத்திவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
பார்ப்போம்...
இந்திராவை நினைவு கூர்ந்த தமிழகம்:
இதற்கிடையே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 86வது பிறந்த நாள் விழா தமிழகத்தில் வழக்கமானஉற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் சார்பிலும் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன்தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் யானைகவுனி பகுதியில் உள்ளஇந்திரா சிலைக்கு மாலை அணிவித்தனர்.சத்தியமூர்த்தி பவனிலும் இந்திரா படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
துறைமுகப் பொறுப்புக் கழக வளாகத்தில் உள்ள இந்திரா சிலைக்கு பொறுப்புக் கழகத் தலைவர் பாஸ்கரதாஸ்மாலை அணிவித்தார்.
-->