வீரப்பனுக்கு போன ரூ. 20 கோடி
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு ரூ. 20 கோடி வழங்கப்பட்டதாக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் கூறியுள்ளார்.
தமிழரான தினகர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால், தமிழர் என்பதாலேயே கர்நாடகத்தில் அடுத்தடுத்து வந்தஆட்சிகளால் ஓரம் கட்டப்பட்டார். மூத்த அதிகாரியான இவருக்கு டி.ஜி.பி. பதவியைத் தரவும் முன்னால் முதல்வர் படேல் மற்றும்இன்னால் முதல்வர் கிருஷ்ணா ஆகியோர் முன் வரவில்லை.
நடுவர் மன்றத்தில் சட்டப் போர் நடத்தத் தான் அந்தப் பதவியைப் பிடித்தார். இவரை தீயணைப்புத்துறை, காவலர் வீட்டுவசதித்துறை டி.ஐ.ஜியாகப் போட்டு கர்நாடக அரசியல்வாதிகள் வாட்டி வந்தனர்.
கடந்த ஆண்டே ஓய்வு பெற்றுவிட்ட தினகர் ஒரு வழக்கறிஞரும் கூட. ராஜ்குமார் கடத்தலின்போது கர்நாடக காவல்துறையின்தலைவராக (டி.ஜி.பியாக) இருந்தவர். இப்போது பழைய கதைகளைக் கிளறியுள்ளார்.
Rajkumar: Veerappans price catch என்ற பெயரில் இவர் எழுதியுள்ள புத்தகம் இப்போது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. நாகப்பா கடத்தலால் பிரச்சனையில் சிக்கியுள்ள முதல்வர் கிருஷ்ணாவுக்கு இந்தப் புத்தகம் மேலும்தலைவலியைக் கொடுத்துள்ளது.
ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு பணமே தரவில்லை என்று தான் கிருஷ்ணா கூறி வருகிறார். அப்போதைய முதல்வர்கருணாநிதியும் வீரப்பனுக்கு தமிழகம் பணம் ஏதும் தரவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், வீரப்பனுக்குப் பணம் தரப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந் நிலையில் தினகரின் புத்தகம் வந்துள்ளது. அந்த புத்தகத்தின் சில ஹை-லைட்ஸ்:
*நெடுமாறன் முதலில் காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்திக்க மறுத்தார். அவரை ரஜினிகாந்த், கன்னட நடிகர் அம்பரீஷ்,ராஜ்குமாரின் குடும்பத்தினர், முதல்வர் கிருஷ்ணா ஆகியோர் தான் காட்டுக்குள் செல்லுமாறு வலியுறுத்தினர்.
*வீரப்பனுக்கு 4 கட்டமாக ரூ. 20 கோடி சென்றது. முதலில் தனது மருமகன் வி.ஜி.சித்தார்தா மூலமாக ரூ. 5 கோடியை கிருஷ்ணாஅனுப்பினார். இன்னொரு 5 கோடி ரூபாய் டி.ஐ.ஜி. ஜெயப்பிரகாஷ் ( இப்போது இவர் கர்நாடக போலீஸ் உளவுப் பிரிவின்ஐ.ஜியாக உள்ளார்) மூலம் அனுப்பப்பட்டது. பின்னர் சித்தார்த்தா மூலம் மீண்டும் ரூ. 5 கோடி வீரப்பனுக்குப் போனது.
*ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா சென்னை சென்றபோது முதல்வர் கருணாநிதியிடம் ரூ 1 கோடி தந்தார். பின்னர் கர்நாடகதிரைப்படத்துறையினர் கருணாநிதியைச் சந்தித்து ரூ. 2 கோடியைத் தந்தனர். அந்தப் பணம் வீரப்பனுக்குப் போய் சேர்ந்தது.
*டாக்டர் பானுவை அவரது இந்திரா நகர் வீட்டில் சந்தித்த பர்வதம்மா அவரிடம் ரூ. 2 கோடி தந்தனர். அதை பானு காட்டுக்குச்சென்றபோது எடுத்துப் போய் தந்தார்.
*நக்கீரன் கோபால் மூலமாக முதலில் பணம் தரப்பட்டது. அதில் ரூ. 50 லட்சத்தை அவர் சுட்டுவிட்டார். அதனால் அவரைதூதராக வீரப்பன் பின்னர் ஏற்கவில்லை.
*காட்டுக்குள் தூதர்கள் சென்றவுடன் அவர்களது செல்போன் மூலம் முதல்வர் கிருஷ்ணாவே வீரப்பனுடன் இருமுறை நேரடியாகப்பேசினார். அப்போது செல்போனை ராஜ்குமாரிடமும் கொடுத்து கிருஷ்ணாவுடன் பேச வைத்தான் வீரப்பன். தூதர்களில்ஒருவரான முன்னாள் டி.ஜி.பி. ராமலிங்கத்தின் மகனின் செல்போன் தான் இந்தப் பேச்சுக்கு பயன்படுத்தப்பட்டது.
*பணம் வந்துருச்சா, அவரை விட்டுவிடு என்று கிருஷ்ணா வீரப்பனிடம் கூறினார். அதற்கு வீரப்பன், அவங்கள (ராஜ்குமார்)விட்டுட்டேங்க என்று பதில் சொன்னான். இந்த செல்போன் உரையாடல் நடந்தபோது நான் முதல்வர் கிருஷ்ணாவுடன் இருந்தேன்.
*ராஜ்குமாரை விடுவிக்கும் முன் வீரப்பன் அடர்ந்த காட்டுக்குள் மறைந்தான். அதற்கான ஏற்பாடுகளையும் முதல்வரே செய்துகொடுத்தார்.
இவ்வாறு குண்டுகளை வீசியுள்ளார் தினகர்.
ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர் இப்படி அரசு ரகசியத்தை போட்டு உடைக்கலாமா என்று நிருபர்கள் கேட்டபோது.கடத்தல்காரன் ஒருவனுடன் பண பேரம் செய்வது அரசு ரகசியமல்ல. அது அரசின் தவறு. இதைத் தான் நான் சுட்டிக் காட்டத்துணிந்தேன். இதனால் எனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்றார்.
இந் நிலையில் தினகருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆளுநர் சதுர்வேதி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்துஅவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
ராஜ்குமார் விடுதலைக்குப் பின் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வீரப்பனின் மனைவி மற்றும் அவனது உறவினர்களின் வீடுகளில்சிபிசிஐடி நடத்திய சோதனைகளில் பல கோடிகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-->