ராணி மேரிக் கல்லூரி: வாஜ்பாய், முதல்வர்களுக்கு ஜெ. கடிதம்- மாணவி மீது திடீர் கருணை
சென்னை:
ராணி மேரிக் கல்லூரியை இடிக்கத் தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பிறப்பித்த உத்தரவைதிரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், தனக்கு நெருக்கமான துணைப் பிரதமர் அத்வானிஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதே போல இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் தருமாறு ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளம் உள்ளிட்ட கடற்கரைமாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே 12 ஆண்டுகளுக்கு முன் ராணி மேரிக் கல்லூரியின் ஒரு கட்டட சுவர் இடிந்து காயமுற்ற மாணவிக்கு ரூ. 9 லட்சம்வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடற்கரைகளில் உள்ள பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கத் தடை விதித்தும், கடலோரத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமானசெலவில் புதிய கட்டடம் கட்டுவதைத் தடுத்தும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
அனுப்பினார் கடிதம்:
இதை எதிர்த்து ஜனாதிபதி, பிரதமர், துணைப் பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது இந்த உத்தரவு. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல். என்னைத் தனிப்பட்டமுறையில் பழிவாங்கவே இந்த உத்தரவை மத்திய அமைச்சர் பாலு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவால் மத்திய- மாநில அரசுகளின் நல்லுறவு கெடும் சூழல் உருவாகியுள்ளது. மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல்தன்னிச்சையாகப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
முதல்வர்களுக்கும் கடிதம்:
அதே போல கடலோர மாநில முதல்வர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பாலு விதித்துள்ள உத்தரவால் மத்தியசுற்றுச்சூழல் துறை ஏதோ பெரிய ஆணையம் போலவும், மாநில அரசுகள் எல்லாம் முனிசிபாலிட்டிகள் மாதிரியும்மாற்றப்பட்டுள்ளன.
மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை வாங்கித் தான் நாம் கடலோரத்தில் கட்டடம் கட்ட முடியும் என்ற சூழல்உருவாகியுள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசை நீங்களும் நெருக்கி உத்தரவை வாபஸ் பெறச் செய்ய முயற்சிக்க வேண்டும் என்றுகூறப்படடுள்ளது.
ஜெயலலிதாவின் திடீர் கருணை:
இதற்கிடையே, கடந்த 1991ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியின் ஒரு கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து ஊனமுற்ற மாணவிக்கு ரூ.9 லட்சம்உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் இன்று அவை விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:
1991ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்த ஷீலா என்றமாணவி தனது துறையின் வராண்டாவில் இன்னொரு மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, வராண்டா மேல்சுவர் இடிந்துவிழுந்தது. இதில் ஷீலாவின் இரண்டு கால்களும் உடைந்தன.
மருத்துவமனையில் 2 மாத காலம் இருந்த ஷீலாவுக்கு அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருப்பினும் அவர் நிரந்தரஊனமடைந்தார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன்தான் ஷீலா நடமாடி வருகிறார். இச் சம்பவம் 1991ம்ஆண்டிலேயே நடந்துள்ளது. ஆனால் ஏன் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மாணவிக்கு உதவித் தொகைவழங்கப்படவில்லை என்று சிலர் கேட்கலாம்.
சம்பவம் நடந்தபோது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த ஆண்டு ஜூன்மாதத்தில்தான் என் தலைமையில் அதிமுக ஆட்சி பதவிக்கு வந்தது.
சதி!!!:
ஆனாலும் இச்சம்பவம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவே இல்லை. திட்டமிட்டு சதி செய்து (!!) சிலர்இவ்விஷயத்தை என்னிடம் தெரிவிக்காமலேயே மறைத்து விட்டனர். சமீபத்தில்தான் ஷீலா பாதிக்கப்பட்டவிஷயம் எனக்குத் தெரிய வந்தது.
வசந்தத்தின் தலை வாசலில் நடமாடிக் கொண்டிருக்க வேண்டிய அந்தப் பெண் தற்போது ஊனமாகி, தனக்குஏற்பட்டுள்ள துயரத்தைப் போக்க முடியாமல் தவித்து வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு வேதனைஅடைந்தேன்.
உடனே ஷீலாவுக்கு ரூ.9 லட்சம் உதவித் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். முதல்வரின் பொதுநிவாரணத் தொகையிலிருந்து இந்த உதவி வழங்கப்படும்.
கருணாநிதி ஏன் உதவவில்லை?
தனக்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி கடந்த 1995ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் பின்னர் கடந்த1998ம் ஆண்டு ரூ. 9 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி இன்னொரு வழக்கைப் போட்டார் மாணவி ஷீலா.
அந்த சமயத்தில், ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி, பாதிக்கப்பட்ட மாணவி ஷீலாவுக்கு நஷ்ட ஈடு தர முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால் அவர்செய்யவில்லை என்றார் ஜெயலலிதா.
மாணவி உதவி கேட்டு மனு செய்ததைப் போய் யாராவது சதி செய்து மறைப்பார்களா என்று தெரியவில்லை. இதில் சதி செய்யும்அளவுக்கு என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை.
எப்படியோ டி.ஆர். பாலு- ஜெயலலிதா அரசியல் சண்டையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நல்லது நடந்துள்ளதுமகிழ்ச்சி தருகிறது.