ல.தி.மு.க.: புதிய கட்சி தொடங்கினார் டி.ராஜேந்தர்!
சென்னை:
திமுகவிலிருந்து மீண்டும் விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத்தொடங்கியுள்ளார் டி.ராஜேந்தர்.
கட்சிக்கு கறுப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதிக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் எந்தவித உத்தரவாதத்தையும் வாங்காமல் காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களை முட்டாள்களாக்கி உள்ளார் கருணாநிதி.
கட்சிக் கொடியிலுள்ள கறுப்பு, சிவப்பு நிறம் அண்ணாவின் அடிப்படை கொள்கையை குறிக்கும், நடுவில் உள்ளமஞ்சள் நிறத்திலான முக்கோணம் சகோதரத்துவம், மதநல்லிணக்கம், மனித நேயம் போன்றவற்றை குறிக்கும்.
மஞ்சள் நிறம் மஞ்சள் குங்குமத்தின் அடையாள சின்னம். மங்களம் பூத்து குலுங்கவே இந்த நிறம். அமைதிஆன்மீகத்தையும் இது குறிக்கும். நான் மதங்களை பார்க்கவில்லை. மனங்களை பார்க்கிறேன். நிறங்களைபார்க்கவில்லை. நெஞ்சங்களை பார்க்கிறேன்.
சிலம்பரசனுக்கும் எனது அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.
மாநிலம் முழுவதும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்படும். திமுகவில் என்னை போல்அமுக்கப்பட்ட பலர் இலட்சிய திமுகவில் சேர ஆர்வமாய் உள்ளனர்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்தக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது. இதுவே எங்களது கட்சியின் தீவிரப் பிரசாரமாக இருக்கும் என்றார் டி.ஆர்.
திமுகவின் முக்கியப் புள்ளியாக ஒரு காலத்தில் விளங்கியவர் டி.ராஜேந்தர். எம்ஜிஆரையே கடுமையாகவிமர்சித்தவர். பின்னர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு கொண்டார். 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து கட்சியிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்றகட்சியைத் தொடங்கினார்.
பர்கூர் தொகுதியில்1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத்தோல்வியைத் தழுவினார். பின்னர் திமுகவில் பிளவு ஏற்பட்டு வைகோ வெளியேறினார். இதனால் திமுகவில்வெற்றிடம் ஏற்பட்டது. இதை நிரப்ப மீண்டும் திமுகவில் இணையுமாறு டி.ஆருக்கு திமுக தூது விட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ஆர். பின்னர் சென்னை பூங்கா நகர் தொகுதியை திமுகஅவருக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் டி.ஆர். ஆனால் மறுபடியும் கட்சித்தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவருக்கு சீட்கொடுக்கப்படவில்லை.
இதனால் திமுகவிலிருந்து ஒதுங்கியிருந்தார். நான் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்று பத்திரிக்கைகள்மூலம் அடிக்கடி கருணாநிதிக்கு கேள்விக் கணைகளை தொடுத்தபடி இருந்தார். ஆனால் ஏதாவது சொல்லப் போகஅது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமே என்ற அச்சத்தால், கருணாநிதி வாயே திறக்காமல் இருந்தார்.
இந் நிலையில் மனம் திறந்த டி.ஆர்., புதிய கட்சி குறித்து அறிவித்துள்ளார். ஆனால் வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் தனது கட்சி அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தரும் என்றும் டி.ஆர். அறிவித்துள்ளார்.