எம்பேடட் டெக்னாலஜி: சர்வதேச மாநாட்டில் தமிழக மாணவரின் ஆய்வறிக்கை
எம்பேடட் டெக்னாலஜி குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க மதுரையைச் சேர்ந்த பொறியியல் மாணவரான பரமேசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா கிளாரா நகரில் இந்த Global Signal Processing Expo&Conference (GSPx) மாநாடு ஆண்டுதோறும் நடக்கிறது.
இதில் எம்பேடட் டெக்னாலஜி குறித்த ஆய்வறிக்கைகள் உலகளவில் வரவேற்கப்படுகின்றன. இதில் மிகச் சிறந்த ஆய்வறிக்கை தேர்வு செய்யப்பட்டு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்டோர் அனுப்பிய ஆய்வுத் திட்டங்களில் 314 ஆய்வறிக்கைகள் மட்டுமே மாநாட்டுக் குழுவின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் 3 இந்திய மாணவர்களின் ஆய்வுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு மாணவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
பரமேஷ் என்ற அந்த மாணவர் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நான்காமாண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் பயின்று வருகிறார்.
இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையின் மரபியல் பிரிவின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ள டாக்டர் குணசேகரனின் மகன்.
நொதித்தல் தொழில்நுட்பம் (Fermentation) தொடர்பான எம்பேடட் டெக்னாலஜி ஆய்வறிக்கையை எழுதியுள்ள பரமேஷ் அதனை GSPx மாநாட்டின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனை அறிவியலாளர்கள் குழு தேர்வு செய்து மாநாட்டில் சமர்பிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை சான்டா கிளாராவில் நடக்கிறது.
சர்வதேச சாப்ட்வேர், ஹார்ட்வேர், எம்பேடெட் டெக்லாஜியின் முக்கிய நிறுவனங்களும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கவும் பரமேசுக்கு அழைப்பு வந்துள்ளது.
ஆனால், வழக்கமாக நடுத்தர குடும்பத்தினர் சந்திக்கும் சிக்கலில் இருக்கிறார் பரமேஷ். தனது பயணத்துக்கான செலவுகளில் ஒரு பகுதியை குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தாலும், மீதியை டிராவல் கிரான்ட்ஸ் மூலம் மட்டுமே சமாளிக்கும் நிலையில் இருக்கிறார்.
பயணத்துக்கு உதவுமாறு டிராவல் கிரான்ட்ஸ் கோரி பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு கடிதங்கள் அனுப்பியபடி நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.