ஜெயேந்திரர் கைதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றம்
சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளன என்றுஉயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் அதற்கான காரணங்களையும்விரிவாக விளக்கியுள்ளார்.
நீதிபதி பாலசுப்ரமணியத்தின் தீர்ப்பு விவரம்: தெய்வத்தன்மை பொருந்திய ஒருவரை தீபாவளிக்கு முன்தினம் கைது செய்திருப்பதுலட்சக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை அதிர்ச்சிப்படுத்தியிருக்கும். எனவே உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறைமட்டுமே இதுபோன்ற சூழ்நிலையை ஆராய்வதற்கு வழிமுறையாக இருக்க முடியாது.
நீதிபதியும் உணர்வுகளுக்கு உட்பட்ட ஒரு மனிதர்தான். ஆனால் உடனடியாக அந்த உணர்விலிருந்து வெளியே வந்து விடவேண்டும். எனவே உணர்ச்சிகளிலிருந்து அப்பாற்பட்டு, மத உணர்வுகளின் பாதிப்புகளில் இருந்து தூர விலகிக் கொண்டு இந்தமனுவை சட்டப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் ஆராய்கிறேன்.
சங்கரராமனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக மனுதாரர் (ஜெயேந்திரர்) மீது அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.கொலை செய்யப்பட்டவருக்கும், மனுதாரருக்கும் இடையே மோதல் இருந்ததாகவும், கொலை செய்யப்பட்டவருக்கு எதிராகமனுதாரர் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதாகவும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
அரசு தரப்பு நம்பும் ஆவணங்களின் மூலம் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. மனுதாரரை இந்த வழக்கில் சேர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும் கேஸ் டைரி மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.
சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மனுதாரரிடம் இருந்து பணம் பெறப்பட்டதற்கும், குற்றவாளிகளுடன் மனுதாரர்தொலைபேசியில் பேசியதற்கும் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன.
அரசுத் தரப்பு சாட்சியங்களை விரிவாக ஆராய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை. எனவே இந்த வழக்கில் அரசுத் தரப்புசாட்சியங்கள் குறித்து விரிவாக ஆராய நீதிமன்றம் விரும்பவில்லை. அரசுத் தரப்பு வழக்கறிஞரும் இதுதொடர்பாக மிகச் சரியாகவாதிட்டுள்ளார்.
மேலும், கைது நடவடிக்கையில் விதிமுறை மீறப்பட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் கைதுசெய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சிடி ஆதாரம் அரசுத் தரப்பு வாதத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
கைது செய்யப்படுவதற்கான காரணத்தை காவல்துறை அதிகாரி மனுதாரரிடம் விரிவாக விளக்குவதை சிடி தெளிவாககாட்டுகிறது. மேலும், மனுதாரர் ஒரு வழக்கறிஞரை உடன் வைத்துக் கொள்ளவும் காவல்துறை அதிகாரி அனுமதி அளிப்பதையும்தெளிவாக கேட்க, பார்க்க முடிகிறது.
மேலும், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது மாஜிஸ்திரேட் முன்பு மனுதாரரின்வழக்கறிஞரும் இருந்துள்ளார். ரிமாண்ட் உத்தரவை நீதிபதி சொல்லுவதற்கு முன்பாக அதை எதிர்த்து அவர் ஆட்சேபனையும்தெரிவித்துள்ளார்.
எனவே ரிமாண்ட் உத்தரவுக்கு முன்பாக தனது கருத்தை மாஜிஸ்திரேட் கேட்கவில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறுவதைஏற்க முடியாது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வேறு சிலரின் மனுக்களும், அவர்களது கருத்தைக் கேட்கஅனுமதிக்கப்பட்டனரா என்ற கேள்விக்கே இடமில்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கையில் அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளோ, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களோ எள்ளளவும்மீறப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜாமீன் வழங்கும்போது வழக்கு தொடர்பான சகல அம்சங்களையும் ஆராய வேண்டும் என்றும், ஏதேனும் ஒரு அம்சத்தைஅடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்கவோ மறுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணமும், குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமும்ஒன்றுதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டுதான் கைது நடவடிக்கை இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
இந்த வழக்கு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மனுதாரர் மீது சுமத்தப்பட்டுள்ளவை மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள். அவரைஇந்த வழக்கில் சேர்த்துள்ளதற்கு அடிப்படை முகாந்திரங்கள் தெளிவாக, வலுவாக உள்ளன. எனவே தற்போதைய நிலையில்ஜாமீன் வழங்க விரும்பவில்லை. மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கூறினார் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம்.