இந்தி: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி தந்த பதிலடி
சென்னை:
தமிழகத்தில் திமுக இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு திமுக தலைவர் கருணாநிதி ஓரங்க நாடகம் மூலம்பதிலளித்திருக்கிறார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ள ஓரங்க நாடகம் வருமாறு:
தங்கை: அக்கா, என்ன திடீர்னு இந்தியை தூக்கிட்டே?
அக்காள்: பிறகென்னடி? இந்தியைத் தூக்காம மந்தியையா தூக்க முடியும்? திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்க வேண்டியிருக்கே.-அதோடு பாலு வேற சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி விடுவான் போல இருக்கு.
தங்கை: -அந்தத் திட்டம் வேணும்னு நம்ப தேர்தல் அறிக்கையில கூட சொல்லியிருக்கோமே?
அக்காள்: ஊரை ஏமாத்தறதுக்கு சொன்னோம்-. அதை இவங்க நிறைவேத்துனா பேரு அவங்களுக்குத்தானே போகும். அதுக்காகத்தான்நம்ப அடியாட்களைவிட்டு ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவிக்கச் சொல்லியிருக்கேன்...
தங்கை: -இந்தியை எதிர்க்க நமக்கு என்ன தகுதியிருக்குன்னு அந்த பாலு கேட்டிருக்கிறாரே?
அக்காள்: பாத்தேன்- பாத்தேன். இந்தி எதிர்ப்பு புரட்சி நடந்து தமிழ்நாட்டிலே பல பிணங்கள் விழுந்தபோது நான் கோவா கடற்கரையில்சினிமா டூயட் பாடிக்கிட்டு இருந்ததை இந்த பாலு ஞாபகப்படுத்தியிருக்கான்...
தங்கை: -அதான் நம்ப பவராலேயும் பணத்தாலேயும் அடிக்கிறோமே. நாம்ப போலீஸ் ராஜ்யம் நடத்துறது உலகத்துக்கே தெரியுமே...
அக்காள்: அதிமுக ஆட்சியிலே அன்பழகன் உள்ளிட்ட 10 பேர் இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக அவங்களை எம்.எல்.ஏ.பதவியை பறிச்சு வெளியே அனுப்பினதைக்கூட பதில் அறிக்கையிலே குறிப்பிட்டு நம்ப மானத்தை வாங்கியிருக்கிறாங்களே அந்த திமுகபசங்க.
தங்கை: ஆமாம்- ஆமாம். அப்ப அதே மாதிரி இந்தியை எதிர்த்து வைகோ கூட திமுக சார்பிலே போராட்டம் நடத்தினாரு. ஆனாஅவரோட ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை மத்தியில இருந்த காங்கிரஸ் பறிக்கலே. ஆனா இங்கே நம்ப அதிமுக ஆட்சியிலேதான்இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தின பத்து திமுககாரர்கள் பதவிகளை பறிச்சு அவங்களை சட்டசபையிலேயிருந்து துரத்திஅடிச்சோம்...
அக்காள்: அந்த அநியாயத்தையெல்லாம் மறைக்கத் தானேடி மாறனின் மகன் தயாநிதிமாறன் இந்தி படிச்சவன்னு ஒரு டூப் அடிக்கிறேன்....
தங்கை: -அக்கா, நீ அடிக்காத டூப்பா? எம்ஜிஆருக்கே உன் மேல பொறாமைன்னு பிரதமராயிருந்த ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியகையாச்சே உன் கை அது மட்டுமா? எம்ஜிஆருக்கு பாலில் விஷம் கலந்து ஜானகி கொடுத்தார்னு பத்திரிக்கைகளுக்கு நீ பேட்டிகொடுக்கலியா அக்கா- அதையெல்லாம் ஆதாரபூர்வமா கருணாநிதி பகிரங்கமா வெளியிட்டும்கூட அதுக்கு இதுவரையிலே நீ மறுப்புதெரிவிக்கலையே.
அக்காள்: அது கிடக்கட்டும்டி. ஆளுவோருக்கு ஆட்பட்டேனும் அரசியல் தலைமை கொள்ள நாளுமே முயன்றோர் தீயோர் என்றபாவேந்தர் கவிதையை எடுத்துவிட்டிருக்கேன் பாத்தியா இந்த அறிக்கையிலே?
தங்கை: அதோட பாவேந்தர் பாரதிதாசன் பாடிய தமிழாய்ந்த தமிழ் மகன் தான் தமிழகத்தில் முதலமைச்சாய் வருதல் வேண்டும் என்றகவிதையையும் நாம் மறந்துடக்கூடாது அக்கா.
அக்காள்: மண்ணாங்கட்டி பாரதிதாசனாவது ஒண்ணாவது.- அந்த ஆள் பாட்டெல்லாம் யாரு படிச்சா? ஏதோ நம்ப கூலிப் பட்டாளம்எழுதிக் கொடுக்கிறதை படிக்கிறேன். -யார் என்ன மறுப்பு சொன்னாலும் சரி நம்ப ஒரு தடவை சொன்னா அது மெய்யாகிடும். அதுக்குத்தான்நமக்கு பாதந்தாங்கிகள் சில பேர் இருக்கிறார்களே-
தங்கை: ஆமாம்- ஆமாம்- தயாநிதி மாறனுக்கு இந்தி தெரியும்னு சொல்லி மக்களை ஏமாத்துனா தானே நீ அன்னைக்கு ராஜ்ய சபையிலேமுழுக்க முழுக்க இந்தியிலே பேசினதை மறைக்க முடியும்? சபாஷ் அக்கா உன் திறமையே திறமை.
அக்காள்: எனக்கு ஒரு பெரிய ஏமாத்தமடி. நான் இந்திப் பிரச்சினையைக் கிளப்பி பிரதமருக்கு கடிதம் எழுதுறதுக்கு முன்னால இந்தபாலுவுக்கு விஷயம் தெரிஞ்சு, அந்த நெடுஞ்சாலை கல்லில் தமிழும் எழுத ஆணையிட்டு அதை அமல்படுத்தி விட்டானே என்ன செய்றது?
தங்கை: -அந்தக் கல்லில் போய் ஓங்கி முட்டிக்க வேண்டியது தான் அக்கா. ஒண்ணு சொல்றேன் கேளு- ஏதோ பதவிக்கு வந்தோம்-. அதைஅனுபவிப்போம்-. நாலு காசு சேர்ப்போம்.- தேவையில்லாம இந்த திராவிட இயக்கம், சுயமரியாதை, மொழிப்போர், இந்தி எதிர்ப்பு- இதைப்பத்தியெல்லாம் பேசி வீணா மாட்டிக்கவேண்டாம்- அக்கா.
நம்ப யாகம் வளர்ப்பது, பூஜை செய்வது இப்படி பக்திபூர்வமான விஷயங்களிலே பகுத்தறிவு பரிணாம வளர்ச்சியை கவனிக்கிறதுதான்நமக்கு நல்லது.
அக்காள்: சரிடி தூக்கம் வருது. மிச்சத்தை நாளைக்குப் பேசலாம்.
தங்கை: அக்கா ஒண்ணு கேக்க மறந்துட்டேனே, சேரன் செங்குட்டுவன் இமயம் வரை போயி கனகவிஜயரை வென்று அவுங்க தலையிலேகல் ஏத்தி அந்தக் கல்லைக்கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை வச்சதை உன் அறிக்கையிலே நினைப்பூட்டி வீர முழக்கம் பண்ணியிருக்கியே.
ஆனால் அந்தக் கண்ணகி சிலையை இப்ப நம்ப ஆட்சியிலே தூக்கி எறிஞ்சுட்டோமே அதை யாரும் நினைக்க மாட்டாங்களா? நினைச்சுகேட்டா என்ன பண்றது?
அக்காள்: என்ன பண்றது எனக்கு எழுதிக் கொடுத்தானே அந்தப் புலவன் அவனை புடிச்சு நம்ப கையாலே நாலு குட்டு குட்றது சரி சரி...இதையெல்லாம் நினைக்காதே- தூக்கம் கெட்டுடும்.. உம் தூங்கு.
(திரை விழுகிறது)
இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.