திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்: கருணாநிதி போராட்டம்
சென்னை:
கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக இன்றும் திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை சபை கூடியதும் முதல்வர் ஜெயலலிதா எழுந்து அவை விதி 110ன் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். திமுக பொருளாளர்ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜின் விளம்பர நிறுவன ஊழியர்கள் அரசுக்குச் சொந்தமான மரத்தை சட்டவிரோதமாக வெட்டியதுகுறித்தும், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறித்தும் ஜெயலலிதா படித்தார்.
அதன் விவரம்: சென்னை நகரின் அழகை சீர்குலைக்கவும், மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளையும் எனதுஅரசு சகித்துக் கொள்ளாது. அவ்வாறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் எதிர்க் கட்சியாய் இருக்கும்போதே ஆற்காடு வீராசாமியின் உறவினர் சட்டவிரோதமான செயல்களில்ஈடுபடுகிறார் என்றால், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்னென்ன செய்திருப்பார்கள் என்பதை மக்களின் சிந்தனைக்கேவிட்டுவிடுகிறேன் என்றார் ஜெயலலிதா.
அப்போது ஆற்காடு வீராசாமி எழுந்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்க முயன்றார். ஆனால், 110வது விதியின் கீழ் வாசிக்கப்படும்அறிக்கைக்கு யாரும் பதில் தர முடியாது என்று கூறி, வீராசாமி பேச அனுமதி மறுத்தார் சபாநாயகர் காளிமுத்து.
இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் எழுந்து அரசுக்கும் சபாநாயகர் இருக்கை முன் கூடினர். வீராசாமியின் பெயரைக் குறிப்பிட்டு முதல்வர்புகார் கூறியுள்ளார், இதனால் வீராசாமி விளக்கம் தர அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் நியாயம் என திமுகவினர் கூறினர்.
அதை காளிமுத்து ஏற்க மறுத்தார். இதனால் திமுகவினர் அவரை சூழ்ந்து கொண்டு உரத்த குரலில் கத்தினர். காளிமுத்து ஆதராவாகஅதிமுகவினர் பதில் கூச்சலிட்டனர். இதனால் அவை அமளி, துமளியானது.
அப்போது சபாநாயகர் காளிமுத்து, திமுக உறுப்பினர்களான பொன்முடி, ரங்கநாதன், பரிதி இளம்வழுதி ஆகியோரின் பெயர்களைச்சொல்லிக் கூப்பிட்டு, நீங்கள் அமைதியாக உட்கார வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற்றுவேன் என்றார்.
இதையடுத்து திமுக தரப்பில் கூச்சல் அதிகமானது. சபாநாயகரின் இருக்கையை நோக்கி திமுக எம்எல்ஏக்கள் பாய்ந்தனர். இதைத்தொடர்ந்து சில அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவினரை நோக்கி பாய முயன்றனர். அவர்களை முதல்வர் ஜெயலலிதா தடுத்து இருக்கையில்அமர உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர் பொன்முடி, ரங்கநாதன், பரிதி இளம்வழுதி ஆகியோரை வெளியேற்றஉத்தரவிட்டார். இதை பிற திமுக எம்எல்ஏக்கள் தடுத்தனர். இதையடுத்து திமுகவினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றகாளிமுத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கூடுதல் காவலர்கள் வந்து திமுகவினரை இழுத்தனர். அவர்கள் வெளியே செல்ல மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் கூச்சல், குழப்பமும் ஏற்பட்டது.
இந் நிலையில் திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர். அப்போதும் அரசுக்கும் காளிமுத்துவுக்கும்எதிராக குரல் கொடுத்தபடியே திமுகவினர் சென்றனர்.
இதற்கிடையே பொன்முடி, பரிதி, அசோகன் ஆகிய திமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டனர்.அவர்களையும் விடாமல் அவைக் காவலர்கள் வந்து இழுத்தனர். அவர்கள் வர மறுக்கவே கையை, காலைப் பிடித்து அப்படியே அலேக்ஆக அவர்களை அவைக் காவலர்கள் தூக்கிச் சென்று வெளியில் போட்டனர்.
அப்போது சபாநாயகருக்கு எதிராக பரிதியும் அசோகனும் உரத்த குரலில் கோஷமிட்டபடியே சென்றனர்.
இதையடுத்து சட்டசபையில் ஜனநாயகம் இல்லை என்று கூறிவிட்டு அனைத்து எதிர்க் கட்சியினரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புசெய்தனர். ஆனால், பாஜகவினர் மட்டும் அவையிலேயே உட்கார்ந்திருந்தனர்.
வெளியில் வந்த திமுகவினர் சட்டசபை வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை அவைக் காவலர்கள் அகற்றமுயன்றபோது சிலர் தரையோடு தரையாக படுத்துக் கொண்டனர். இதையடுத்து அவர்களை அப்படியே தூக்கிக் கொண்டு அவைக்காவலர்கள் நடந்தனர். தூரத்தில் போய் இறக்கிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வெளியில் வந்த திமுக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோட்டைக்கு எதிரே உள்ளகடற்கரைச் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களைக் கைது செய்ய போலீசார் வருவார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.
ஆனால், போலீஸ் வரவே இல்லை. அங்கு வெகு நேரம் அவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்துதிருப்பிவிடப்பட்டது. இதனால் கடற்கரைச் சாலை வெறிச்சோடியது.
இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையை நோக்கி அவர்கள் சென்றனர். சபாநாயகர் காளிமுத்துவே அடிக்காதேஅடிக்காதே ஜால்ரா அடிக்காதே.. சட்டமன்ற மரபை மீறாதே என அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.
மேலும், பார்த்தியா பார்த்தியா சட்டமன்றத்தைப் பார்த்தியா? சர்வாதிகார ஆட்சி நடக்குது பார்த்தியா என்றும் கோஷமிட்டனர்.
இந்தத் தகவல் அறிந்து ஏராளமான திமுக, பாமக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் அங்கு விரைந்து வந்தனர்.எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் நடந்து சென்றனர்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே உச்சி வெயிலில் நடு ரோட்டில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் அங்கு வந்து சேர்ந்தார். கொளுத்தும் வெயிலில் அவரும் போராட்டத்தில் ஈடுபட்டார்.நடுரோட்டில் அமர்ந்தார். அவருக்கு அருகில் இருந்த கடைசியில் இருந்து நாற்காலி அனுப்பப்பட்டது. அதில் அமர்ந்து போராட்டத்தில்ஈடுபட்ட அவரைக் கிளம்பிச் செல்லுமாறு அன்பழகன் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். எதிர்க் கட்சி மூத்த எம்எல்ஏக்களும்வலியுறுத்தினர்.
ஆனாலும் எதிர்க் கட்சி எம்எல்ஏக்களுடன் இணைந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார் கருணாநிதி. இதனால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இதையடுத்து கருணாநிதி அங்கிருந்து கிளம்பினார். அவரை போலீசாரே கைத்தாங்களாக அழைத்துக் சென்று காரில் ஏற்றிஅனுப்பி வைத்தனர்.
அவர் சென்ற பின்னர் போலீசார் அங்கு வந்து எம்எல்ஏக்களைக் கைது செய்து வேன்களில் ஏற்றி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்றனர். அங்கு இறங்கியதும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர்களைவிடுவித்துவிட்டனர்.
கடந்த 7ம் தேதியும் துரைமுருகன் தவிர்த்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவைக் காவலர்களைக் கொண்டு சபாநாயகர் காளிமுத்துவெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் துரைமுருகன் தானாகவே வெளியேறினார்.