அலைகள் எங்கள் தாயாகும்..: சுனாமி பாதித்த பகுதியில் கலாம் பாடிய கவிதை
நாகப்பட்டனம்:
நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி அப்துல் கலாம், குழந்தைகள் மத்தியில ஒருகவிதையைப் பாடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அலைகள் எங்கள் தாயாகும்
அதுவே எங்கள் நண்பனுமாகும்
அலைகள் கோபம் கொண்டு
கரை நோக்கி வீறு கொண்டு எழுவதுண்டு
அதன் பேரழிவால் வாழ்வில்
சோதனைகள் வருவதுண்டு
ஆழ்கடல் அலை அமைதியற்று ஆர்ப்பரிக்கும்போது
பாதிக்கப்பட்ட நெஞ்சங்கள்
அலைகடல் போன்று நிலையின்றி தவிக்கின்றன
இந்நிலை எங்குள்ளோருக்கு வந்தாலும்
அதனை அறிவும், உழைப்பும், துணிவும் கொண்டு
இறைவன் அருளால் வெற்றி பெறுவோம்
நாம் எல்லோரும் இறைவன் அருளால்
வெற்றி பெறுவோம்.
மக்களுக்கு கலாம் ஆறுதல்
முன்னதாக நாகை மவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மக்களைசந்தித்து ஆறுதல் கூறினார். பள்ளிச் சிறுவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் உரையாடினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு கடற்கரை அருகே சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகள்,உறவுகளை இழந்த 150 பேரை கலாம் சந்தித்துப் பேசினார். அங்கு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவர்அருகிலும் சென்று கலாம் பரிவுடன் பேசினார்.
அப்போது மீனவர்கள் பலர் கலாமிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அவற்றில் முக்கியமானது தங்களுக்குபாதுகாப்பான இடத்தில் நிரந்தர வீடுகள் கட்டித் தரவேண்டும் என்பது.
அதற்கு, கடலிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் நீங்கள்200 மீட்டர் தொலைவுக்குள் வேண்டும் என்று கேட்கிறீர்களே என்று கலாம் கேட்டார். அப்போதுதான் தங்களது மீன் பிடித்தொழிலுக்கு அது சவுகரியமாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
உங்களது மாவட்ட ஆட்சித் தலைவர் அமெரிக்காவில் நடந்த இயற்கை சீரழிவு மேலாண்மையில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.எனவே உங்களுக்குத் தேவையானதை அவர் நிச்சயம் செய்து கொடுப்பார் என்று கலாம் உறுதியளித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நானும் ஒரு தீவைச் சேர்ந்தவன் தான், ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவன்தான் நான். ராமேஸ்வரத்தில் 1967ம் ஆண்டு பெரிய புயல் வீசியது.
அந்த சமயத்தில் நான் திருவனந்தபுரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அப்பாவும், அம்மாவும் ராமேஸ்வரத்தில்இருந்தார்கள். அப்போது அப்பாவுக்கு வயது 80, அம்மாவுக்கு 75. புயலுக்குப் பிறகு அவர்களை என்னுடன் அழைத்துக்கொள்ள விரும்பி கேட்டேன்.
அதற்கு அவர்கள், நாங்கள் கடலிலே பிறந்தவர்கள், கடலிலேயே வாழ்க்கையை தொடங்கியவர்கள். இங்கேயே முடித்துக்கொள்ளவே விரும்புகிறோம் என்று கூறி வர மறுத்து விட்டார்கள்.
நானும் கடல் பகுதியைச் சேர்ந்தவன்தான். நாங்கள் எல்லாம் சொல்வோம், அலைகள் எல்லாம் தாயாகும், அதுவே எங்கள்நண்பனும் ஆகும் என்று. அது கோபம் கொண்டு பேரலையாக எழும்பும்போது வாழ்வில் சோதனை வருவதுண்டு.உங்களுக்கெல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிரந்தர வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களைப் பார்க்கும்போது உங்களது துயரங்களை, வேதனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சொந்தங்களைஇழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் வேளாங்கண்ணி புனித மயன்னை பேராலயத்திற்கு கலாம் சென்று சுற்றிப் பார்த்தார். இதுவும் சுனாமியால்பாதிக்கப்பட்ட ஆலயமே. பேராலயத்தில் சுனாமிக்குப் பலியானவர்களுக்கு சிறப்புப் பிரார்த்தனை செய்தார் கலாம். அதன்பின்னர் தெற்கு பொய்கை நல்லூர் உழவர்களை சந்தித்துப் பேசினார்.
அவர்களிடையே பேசிய கலாம், நான் சில உறுதிமொழிகளை இங்கே வாசிக்கிறேன். அதை அப்படியே திரும்பக் கூறுங்கள்என்றார்.
இதைத் தொடர்ந்து கலாம் சொல்லச் சொல்ல உழவர்கள் திருப்பிச் சொன்ன உறுதிமொழிகள் விவரம்:
ஊரணிகளுக்கு உயிர் கொடுப்போம்; குழந்தைகள் நம்முடைய விலை மதிப்பில்லாத சொத்துக்கள். ஆண் குழந்தையையும்,பெண் குழந்தையையும் சமமாக பாவித்து, அவர்களின் உரிமைக்காவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம்;வளமையான நல வாழ்விற்காக நாம் எல்லோரும் சிறு குடும்ப திட்டத்தை கடைப்பிடிப்போம்;
கடின உழைப்பால் வருமானத்தைப் பெற்று, அதை மதுவாலும், சூதாட்டத்தாலும் வீணாக்க மாட்டோம்; எல்லோரும் குறைந்தது5 மரக் கன்றுகளையாவது நடுவோம்; குழந்தைகளுக்கு நாம் முன் உதாரணமாக இருப்போம்; துன்பத்தைக் கண்டு துவளாமல்அந்தத் துன்பத்தை தாங்கும் சக்தியை கொடுப்போம்.
பின்னர் கடம்பாடி என்ற இடத்திற்குச் சென்ற கலாம் அங்கு அரசுக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெற்றோரை இழந்த95 குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் அளவளாவினார். அவர்களுக்கு தைரியம் கூறினார்.
அதன் பின்னர் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் கலாம் சென்றார். அக்கரைப்பேட்டையில் உள்ளமுத்துமாயம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். இரவு நாகையில் தங்கிய கலாம் இன்று காலை திருச்சி திரும்பி டெல்லிசெல்கிறார்.