வீறு கொண்டு எழுகிறார் விநாயகமூர்த்தி! தனிக் கட்சி தொடங்க திட்டம்?
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை அடைகிறது. விநாயகமூர்த்தி எம்.எல்.ஏ., வாசன் எதிர்ப்பு தலைவர்களைஒருங்கிணைத்து மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியும், கோஷ்டிப் பிரச்சினையும் நகமும், சதையுமாக எப்போதும் இரண்டறக் கலந்து காணப்படுகிறது.அவ்வப்போது கோஷ்டிப் பூசல் பயங்கரமாக வெடிக்கும், சில நேரங்களில் புதிய கட்சிகள் உருவாகும், பல நேரங்களில்புஸ்வாணமாகிப் போகும்.
அந்த வகையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் பலத்த சப்தத்துடன் வெடித்துக் கிளம்பியுள்ளது. இந்தமுறை கோஷ்டிப் பூசலுக்கு பிள்ளையார் சுழி போட காரணமாக இருந்தவர் சென்னை பூங்காநகர் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி.
தமிழகத்தில் விநாயகமூர்த்தியை அறிந்தவர்கள் ரொம்பவும் குறைவு. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட அதிக அளவில்அறியப்படாத ஒரு தலைவராக இருந்து வந்தவர் விநாயகமூர்த்தி.
அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்ற விநாயகமூர்த்தி தற்போது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தும் அளவுக்குபெரிய ஆளாக உருவாகியிருக்கிறார்.
வாசன், இளங்கோவன் கோஷ்டியினர் சில காலமாக அமைதி காத்து வந்தனர். சின்னச் சின்ன உரசல்களைத் தவிர பெரியஅளவில் பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல்வெளியானது முதல் கோஷ்டி மோதல் மீண்டும் வலுவடைந்தது.
இளங்கோவன் ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால் அவர்கள் கொதிப்படைந்தனர். வாசன் கோஷ்டியைஎப்படியும் கவிழ்த்தே தீருவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
இந் நிலையில் தான் வசமாக வந்து சிக்கியது விநாயகமூர்த்தி விவகாரம். மூத்த தலைவரையே சத்தியமூர்த்தி பவனில் வைத்துஅடிப்பதா என்று வெகுண்டெழுந்தது இளங்கோவன் தரப்பு. விநாயகமூர்த்தியும், இளங்கோவனை நேரில் சந்தித்து ஆதரவுகேட்டார்.
அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், சத்தியமூர்த்தி பவன் வன்முறை பவனாக மாறி வருகிறது,வன்முறையாளர்களுக்கு கட்சித் தலைமை பாதுகாப்பாக, ஆதரவாக இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இளங்கோவனின் பேச்சுக்கு வாசன் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இளங்கோவன் தொடர்ந்து கட்சி விரோதநடவடிக்கைகளில்ஈடுபட்டு வருவதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் டெல்லி மேலிடத்திற்குத்தந்திகள் அனுப்பி வருகின்றனர்.
தற்போதைய விநாயகமூர்த்தி விவகாரத்தை, வாசன் தரப்பு, கட்சியை பிளவுபடுத்தும் அதிமுகவின் வேலையாகவே பார்க்கிறது.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் மாற்றுக் கட்சியினர்யாரையும் மேடையில் பேச விடுவதில்லை.
இந் நிலையில் விநாயகமூர்த்திக்கு மட்டும் எப்படி பேச அனுமதி கிடைத்தது? காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கவேண்டும், கட்சியை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் வேண்டும் என்றே விநாயகமூர்த்தியைப் பேசவிட்டுள்ளார்கள்.
தனிக்கட்சி தொடங்க திட்டம்?
ஜெயலலிதாவின் நோக்கத்திற்கேற்ப விநாயகமூர்த்தியும் பேசியுள்ளார். அவர்கள் விரித்த வலையில் விநாயகமூர்த்தி விழுந்துவிட்டார். அப்படிப்பட்ட விநாயகமூர்த்தியை இளங்கோவன் ஆதரிப்பது, ஜெயலலிதாவையே ஆதரிப்பதற்கு சமம் என்றுகோபத்துடன் கூறுகிறார்கள்.
இந் நிலையில் விநாயகமூர்த்திய புதிய முயற்சி ஒன்றில் படு தீவிரமாக இறங்கியுள்ளது வாசன் தரப்பில் பீதியைஏற்படுத்தியுள்ளது. வாசனுக்கு எதிரான தலைவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த விநாயகமூர்த்திமுடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக முதலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்த விநாயகமூர்த்தி தொடர்ந்து ஜெயந்தி நடராஜன்,கே.வி.தங்கபாலு ஆகியோரை சந்தித்துப் பேசினார். அடுத்ததாக பிரபு, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரிடம் அவர்தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையடுத்து இந்தத் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி, வெள்ளையனே வெளியேறு தினத்தன்று சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில்நடைபெறும் எனத் தெரிகிறது.
இது தவிர இன்னொரு முடிவிலும் விநாயகமூர்த்தி உறுதியாக இருக்கிறாராம். காங்கிரஸ் கட்சியில் தனக்கு நெருக்கடிஏற்பட்டாலோ அல்லது வெளியேற்றப்படும் நிலை உருவானாலோ, புதுக் கட்சி தொடங்கவும் தயாராக உள்ளாராம்.
அப்படித் தனிக் கட்சி தொடங்கும் பட்சத்தில் வாசன் எதிர்ப்பு தலைவர்களும், அதிமுகவும் தனக்கு மறைமுகமாக ஆதரவுதருவார்கள் என்ற நம்பிக்கை விநாயகமூர்த்தியிடம் உள்ளதாம். விநாயகமூர்த்தியின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் வாசன்தரப்பு சற்றே கலக்கத்துடன் நடப்பவற்றை பார்த்துக் கொண்டு வருகிறது.