ரூ. 3,887 கோடி திட்டங்கள்: பணம் இருக்கா? ஜெவுக்கு திமுக கூட்டணி கேள்வி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 73 நாட்களில் அறிவித்துள்ள 43 திட்டங்களை நிறைவேற்ற ரூ. 3,887 கோடி நிதிதேவைப்படுகிறது. இந்த நிதியை எப்படி தமிழக அரசு ஏற்பாடு செய்யப் போகிறது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கோரியுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமைமாலை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கில் நடந்தது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்தியகம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மத்திய குழு உறுப்பினர் நல்லகண்ணு, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பல்வேறுதிட்டங்கள், சலுகைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மான விவரம்: கடந்த 2001ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2004 ஏப்ரல் மாதம் வரை அனைத்துத் தரப்பு மக்களின்சலுகைகள், உரிமைகள் பறிப்பு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிச் சுமை சுமத்திய நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுகபெரும் தோல்வியைச் சந்தித்தது.
அதன் பிறகு மக்களை சரிக் கட்டுவதற்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த 73 நாட்களில் மட்டும் 42அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற ரூ. 3,887.43 கோடி நிதி தேவைப்படும்.
எந்தவித நிதி ஆதாரங்களும் இல்லாமல், நிதி அனுமதியும் இல்லாமல், நடைமுறைத் திட்டங்கள் இல்லாமல், நிதிக் கட்டுப்பாடுஇல்லாமல் தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு இந்தத் திட்டங்களை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார், தொடர்ந்து அறிவித்துவருகிறார்.
இந்தத் திட்டங்களை நிறைவேற்ற தேவைப்படும் இவ்வளவு பெரிய நிதியை தமிழக அரசு எப்படி ஏற்பாடு செய்யப் போகிறதுஎன்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே 2004ம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா வெளியிட்டு வரும் ஆணைகள், அறிவிப்புகளுக்கான நிதிஒதுக்கீடு, நிறைவேற்றி முடிப்பதற்கான காலவரையறை குறித்து அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில்தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், போலி வாக்காளர் விண்ணப்பங்களை சமர்ப்பித்த அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஏழை மற்றும் கிராமப்புறமாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இதை சரி செய்ய மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சென்றுஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் பிரதமரிடம் மனு அளிப்பார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சில மாற்று வழிகளை மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர். அவற்றை மத்திய அரசுபரிசீலிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications