நிபந்தனை மீறல்: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு
சென்னை:
உழவர் மாநாட்டுக்காக நேரு ஸ்டேடியத்தை பயன்படுத்தியபோது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறிய தமிழக அரசின் மீதுஅவமதிப்பு வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் சென்னை உயர் நீதிமன்றம் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக இன்று பத்திரிக்கையில் வெளிவந்த புகைப்படங்களையே சாட்சியமாக வைத்து, தமிழக அரசின் மீது நீதிமன்றம்தானாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.கருணாநிதி முதல்வராக இருந்தபோது நேரு விளையாட்டு அரங்கில் அவருக்கு நடத்தப்பட இருந்த விழாவை எதிர்த்து வழக்குப்போட்டார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது விளையாட்டுப் போட்டிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக் கூடாது எனஉச்சநீதிமன்றம் கூறியது.
இந் நிலையில் அதே நேரு விளையாட்டு மைதானத்தின் வெளி அரங்கில் உழவர் மாநாட்டை நடத்தினார் ஜெயலலிதா. இதைஎதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி தினகரன், நீதிபதி தணிகாசலம் ஆகியோர், பலநிபந்தனைகளுடன் இந்த அரங்கில் மாநாடு நடத்த கடந்த 4ம் தேதி அனுமதி தந்தனர்.
அந்த நிபந்தனைகள் விவரம்:
அரங்கின் தட களத்தில் (வெளி அரங்கில்) விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். வேறு நிகழ்ச்சிகளைஇயற்கையான மண் தரையிலேயே அதற்கு பாதிப்பு ஏற்படாமல் நடத்த வேண்டும். இதனால் தடகளத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
அரங்கில் மேடைகள், வரவேற்பு வளைவுகள் அமைக்கக் கூடாது. பள்ளம் தோண்டக் கூடாது. அங்கு அரசியல் கட்சிக் கொடிகள்பறக்கக் கூடாது.
கேலரியில் உள்ள இருக்கைககளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர வேண்டும்.
மண் தரையிலும், சிந்தடிக் தளத்திலும் மேடை ஏதும் அமைக்கக் கூடாது. கேலரி அல்லது ஸ்டேடியத்தில் இரவில் யாரும் தங்கக்கூடாது. இவ்வாறு கடுமையான நிபந்தனைகளுடன் இந்த மாநாட்டை நடத்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதிஅளித்துள்ளனர்.
ஆனால், நேற்று முன் தினம் மாநாடு நடந்தபோது இந்த நிபந்தனைகளை தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டது. வெளி அரங்கில்உள்ள செயற்கை ஓடு தளத்தில் ஏராளமான அதிமுகவினரும் கூட்டி வரப்பட்ட விவசாயிகளும் நடமாடினர்.
மேலும் ஜெயலலிதாவுக்கு முன்பான அணி வகுப்பு நடத்திய போலீஸ் பாண்ட் வாத்தியக் குழுவினரும் அதில் நடந்து சென்றனர்.இதற்கெல்லாம் மேலாக அந்த வெளி அரங்கில் ஒரு மேடையையும் போட்டனர்.
இந்த நிபந்தனை மீறல் குறித்த படங்கள் இன்று பத்திரிக்கைகளில் வெளியாயின.
இவற்றையே ஆதாரமாக எடுத்துக் கொண்ட நீதிபதிகள் தினகரன், தணிகாசலம் ஆகியோர் இன்று தமிழக அரசின் தலைமைவழக்கறிஞர் என்.ஆர்.சந்திரனை வரவழைத்து, நீதிமன்ற நிபந்தனைகளை தமிழக அரசு காற்றில் பறக்க விட்டது குறித்து கேள்விஎழுப்பினர்.
அரசின் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று கேட்டனர். இதற்கு பதிலளிக்க சந்திரன் காலஅவகாசம் கேட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தை வரும் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
நேரு ஸ்டேடியத்தை விளையாட்டு தவிர வேறு நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு போட்டு, அதை தானேமீறி, இப்போது தானே நீதிமன்ற சிக்கலில் மாட்டியுள்ளார் முதல்வர்.