ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியிடம் ஜெ. ரூ.40 கோடி லஞ்சம்: கருணாநிதி
சென்னை:
ராமச்சந்திரா மருத்துவமனையை நிர்வாகததிடம் திருப்பித் தர ஜெயலலிதா அரசு ரூ. 40 கோடி லஞ்சம் பெற்றதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் எம்.ஜி.ஆர். நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரணம் பெற வந்த கூட்டத்தினரிடையே ஏற்பட்டநெரிசலில் 51 பேர் இறக்கக் காரணமாக இருந்த அரசு-போலீசின் அலட்சியத்தைக் கண்டித்தும்,வதந்தி பரப்பியதாக திமுக கவுன்சிலர் மீது வழக்குப் போட்டு அரசின் தவறை திசை திருப்ப முயல்வதைக் கண்டித்தும், நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்கக் கோரியும் திமுக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும்மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், தலைமைத் தபால் நிலையங்கள் முன்பும் இந்தப் போராட்டம்நடத்தப்பட்டது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்குத் கருணாநிதி தலைமைதாங்கினார்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ குழு உறுப்பினர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
தமிழகத்துக்கு விடிவுகாலம் ஏற்படுத்த வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள். எம்ஜிஆர் நகரில் நடந்த நெரிசல்பலிகளுக்கு முதலில் அதிகாரிகளும் போலீசாரும் தான் காரணம் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால்,அதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் எதிர்க் கட்சிகள் மீது பழியைப் போட்டு விஷயத்தை திசை திருப்பமுயல்கிறார்கள்.
அதற்காகத் தான் தனசேகரனைக் கைது செய்திருக்கிறார்கள். ஜாமீனில் தனசேகரன் விடுவிக்கப்பட்டதும், அவரச அவரசமாகஅப்பீல் செய்து ஜாமீனுக்குத் தடை வாங்கி, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். அப்பீல் விஷயத்தில் இந்தஅரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
திமுக ஆட்சியில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றது. அதை எதிர்த்து நிர்வாகத்திடன் கோர்ட்டுக்குச் சென்றனர்.அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் கல்லூரியை நிர்வாகத்திடமே ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால்,அப்போது அப்பீலுக்குப் போகவில்லை ஜெயலலிதா.
தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில் அவசர, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி கல்லூரியை நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுக்கதீர்மானம் போட்டார். இடையில் ராமச்சந்திரா மருத்துவமனையிடம் இருந்து ரூ. 40 கோடி லஞ்சமாக வாங்கினார்.
தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. ஆட்சியாளர்களின் அக்கிரமங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்கள் தான்.தனசேகரனை எப்படி மீட்பது என்பதை முடிவு செய்ய மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவோம்.
நாமெல்லாம் கேட்டுக் கொண்டதால் தான் தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 1,000கோடியை வழங்கியது. அதை இப்போது ஆளுங்கட்சியினர் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன ஜெ வீட்டுப்பணமா? என்று கேட்டார் கருணாநிதி.
அதேபோல விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் அன்பழகன்தலைமையிலும், திருச்சியில் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் தலைமையிலும், மதுரையில் மாவட்ட செயலாளர்வேலுச்சாமி தலைமையிலும், விருதுநகரில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையிலும்,கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.