தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை: அரசு
சென்னை:
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறவே இல்லை. எனவே பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை, கோழிக் கறியை சாப்பிடுவதிலும் தயங்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், விஜயலட்சுமி பழனிச்சாமி, வைத்திலிங்கம், தாமோதரன் மற்றும் தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பறவைக் காய்ச்சலைத் தடுப்பது குறித்தும், பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரக்கை நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பறவைக் காய்ச்சல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நோய் முன்பு வெளிநாடுகளில் பரவியபோதே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வருடமாகவே 15 நாட்களுக்கு ஒருமுறை கோழிகளின் ரத்த மாதிரிகள், போபாலில் உள்ள கோழியின ரத்தப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி சோதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 31ம் தேதி எடுக்கப்பட்ட சோதனையின்படி தமிழகத்தில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்கம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில், பறவைக் காய்ச்சல் தாக்கி விடாதபடி தீவிரக் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.
மாவட்டம்தோறும் ஆட்சித் தலைவர் தலைமையில் உடனடியாக உயர்மட்டக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்படுகிறது.
மாநில கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான கட்டுப்பாட்டு அறை உடனடியாக அமைக்கப்படும்.
இதேபோல, கோழிப் பண்ணைகளில் கோழிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். வேறு பறவைகளை வளர்க்கக் கூடாது.
ஒரு பண்ணையில் வேலை பார்ப்போர் வேறு வேறு பண்ணைகளில் மாறி மாறி போய் வேலை பார்க்கக் கூடாது.
கோழிப் பண்ணைகளில் வேலை பார்ப்போர் கையுறை, காலுறை உள்ளிட்டவற்றை முறையாக அணிந்து வேலை பார்க்க வேண்டும்.
கோழிகள் மற்றும் முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்கள், உரிய கிருமி நாசினிகளைத் தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தற்போது பறவைக் காய்ச்சல் அறவே இல்லை. எனவே பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. கோழிக்கறி, முட்டைகளை சாப்பிடவும் அஞ்சத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு உபதேசம்:
இதற்கிடையே, பறவைக் காய்ச்சல் பீதியால் பயப்பட வேண்டாம், கோழிக்கறி, முட்டை சாப்பிடலாம் என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில்,
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவு விடுதியில், கோழிக் கறிக்கும், முட்டைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களுக்கு அறிவுரை வழங்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள், முதலில் அவர்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும், அதை விடுத்து அவர்களே கோழிக்கறி, முட்டை சாப்பிட மறுத்து தயங்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.