ராமதாசுடனான உறவு நீடிக்கும்: திருமா.
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், பாமகவுடன் இணைந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக அணியில் இடம் பெற முயற்சித்து அது தோல்வி அடைந்ததால், தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் திருமாவளவன்.தேர்தலில் தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், எங்களது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதுதான் எங்களது முக்கிய நோக்கம். 25 தொகுதிகளை எதிர்பார்த்தோம். ஆனால் குறைந்த அளவிலான தொகுதிகளே கிடைத்துள்ளது.
இருந்தாலும், வெற்றி பெறக் கூடிய தொகுதிகளையே தருவோம், கொடுக்கும் தொகுதிகளில் வெற்றி பெற உழைப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
எனவே 9 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பெரும்பாலும் தனித் தொகுதிகளே எங்களுக்கு ஒதுக்கப்படும் என நினைக்கிறோம்.
நான் கடலூர் மாவட்டம் மங்களூர் அல்லது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன்.
எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மாட்டோம். சுயேச்சையான ஒரு சின்னத்தைத் தேர்வு செய்து போட்டியிடுவோம்.
எங்களுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான்.
டாக்டர் ராமதாஸுடன் எனது உறவு நீடிக்கும், தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து செயல்படும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட களம். எனவே தொடர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கம் நீடிக்கும்.
தலித் மக்களையும் மதித்து, எங்களை அங்கீகரித்து கூட்டணிக்காக அழைத்தது அதிமுக மட்டுமே. எனவே தான் இந்தக் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டோம்.
அதிமுக கூட்டணியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களை திமுக கூட்டணியில் சேர்க்க ராமதாஸ் எடுத்த முயற்சிகளை கருணாநிதி விரும்பவில்லை. தந்தையின் கருணை இல்லாதபோது தாயின் கைகள் அரவணைக்கும் என்பதைப் போல அதிமுக எங்களை ஆதரித்துள்ளது.
பாமகவுடன் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் பாமக தொகுதிகளில் அதிமுக எங்களை நிறுத்தினால் நிற்போம். அந்தப் போட்டியை தவிர்க்க மாட்டோம்.
ஈழப் பிரச்சனையில் எங்கள் நிலைப்பாடு தான் அதிமுகவின் நிலைப்பாடும். சமீபத்தில் ராஜபக்ஷே சென்னை வந்தபோது அவரை ஜெயலலிதா சந்திக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவே கூட்டணி வைத்துள்ளோம். இதனால் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார் திருமா.
அதிமுக கூட்டணியில் விஜய்காந்தை சேர்த்தால் ஏற்பீர்களா என்று கேட்டபோது, அப்படி ஒரு நிலை வந்தால் எங்கள் முடிவைத் தெரிவிப்போம் என்றார். அதிமுக கூட்டணிக்கு மதிமுக, பாமகவும் வர வேண்டும் என்றார்.
திருமா. கேட்டுள்ள தொகுதிகள்:
இதற்கிடையே அதிமுகவிடம் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்பார்க்கும் 9 தொகுதிகள்குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.
முதல்வர் ஜெயலிலதாவிடம் திருமாவளவன் கொடுத்துள்ள தொகுதிப் பட்டியல்:
மங்களூர், சீர்காழி, நன்னிலம், வானூர், தலைவாசல், காட்டுமன்னார்கோவில், அரூர்,சமயநல்லூர், வாசுதேவநல்லூர், வரகூர், அவினாசி, வால்பாறை (இவை அனைத்தும்ரிசர்வ் தொகுதிகள்), மயிலாடுதுறை, கண்டமங்கலம், சின்னசேலம் (பொதுத்தொகுதிகள்).
இவற்றிலிருந்து 9 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கக் கூடும் அல்லது இதில்இடம்பெறாத வேறு தொகுதிகளும் ஒதுக்கப்படலாம்.
இதில் காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டியிடவுள்ளார். கடந்த முறைஅவர் திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர்திமுக கூட்டணியை விட்டு விலகியதும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமாசெய்துவிட்டார்.
இந்தமுறை மங்களூர் தொகுதியை தனது கட்சியின், மாவட்ட அமைப்பாளர்கருப்பசாமி அல்லது மாநில துணை பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோரில்ஒருவருக்கு திருமா ஒதுக்குவார் என்று தெரிகிறது.
நன்னிலம் தொகுதியில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்இனியனின் மனைவி அமுதா நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.