என்னைக் காக்கும் தமிழ்: கருணாநிதி உருக்கம்
திருச்சி:
நண்பர்களை எனக்கு அடையாளம் காட்டியதும் தமிழ்தான், பகைவர்களிடம், துரோகிகளிடம் எச்சரிக்கையாக இரு என்று என்னைக் காத்ததும் தமிழ்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறினார்.
திருச்சியில் முடிவடைந்த திமுக மாநில மாநாட்டில் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.மத்திய அரசுக் கூட்டணியில் இருந்தபடி தமிழக மக்களுக்காக திமுக செய்த சாதனைகள், மத்திய அரசின் சாதனைகள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சாதனைகளை அவர் விரிவாக விளக்கினார். இடை இடையே வைகோவை மறைகமாக தாக்கவும் அவர் தயங்கவில்லை.
கருணாநிதியின் பேச்சு:
அரசியலில் என்னை கை தூக்கி விட்ட மாவட்டம் திருச்சி. எப்போதுமே கை தூக்கி விட்டவர்களை மறக்கக் கூடாது என்று நம் மூத்தோர் சொல்லியுள்ளனர். எனவே திருச்சி மாவட்ட மக்களையும் நான் எப்போதும் மறக்க மாட்டேன்.
இந்த மாநாட்டை அன்பில் தர்மலிங்கம், தம்பி கே.என். நேருவின் உருவிலே வந்து நடத்தியிருக்கிறாரோ என்று எண்ணத்தக்க வகையில், மிகச் சிறப்பாக நடத்தியிருக்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பாழாகி விட்டதாக குறிப்பிட்டார். பாழாய்ப் போன தமிழ்நாட்டை மறுமலர்ச்சி பெற்ற தமிழ்நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு.
தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலம் ஆக்குவேன் என்று ஜெய
லலிதா கூறி வருகிறார். ஆனால் தமிழகம் முதலை மாநிலமாக மாறியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்கள் என்ன செய்து கிழித்து விட்டார்கள் என ஜெயலலிதா கேட்கிறார். அதற்கு சோனியா காந்திதான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவருக்கு நேரமில்லை, அதனால் நானே சொல்கிறேன்.
சேது சமுத்திரத் திட்டம், சென்வாட் வரி ரத்து, பொடா சட்டம் ரத்து, தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மாற்றப்பட்டு வருவது, தம்பி தயாநிதி மாறன் இலாகாவின் தயவால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1 ரூபாயில் எஸ்.டி.டி. பேசும் வசதி.
இவையெல்லாம் தமிழக அமைச்சர்கள் இல்லாமலா வந்தது?
இதுமட்டுமல்ல, தமிழகத்தில் மட்டும் மத்திய அரசின் சார்பில் 45 திட்டங்கள் ரூ. 26,557 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை எல்லாம் சாதனைகள் இல்லையா?
தமிழ் மொழியை செம்மொழியாக்கியது ஐக்கியமுற்போக்கு அரசினால் நடத்தப்பட்டது என்றாலும் அதற்குரிய முழுக் காரணமும் திமுகதான் என்று என்னைப் பாராட்டி சோனியா காந்தி அம்மையார் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் வாசகங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.
எனது கல்லறையில் இந்த வாசகங்கள் இடம்பெற்றால் மெத்த மகிழ்ச்சி அடைவேன்.
தமிழ்தான் எனக்கு நண்பர்களைக் காட்டியது, தமிழ்தான் நான் சோர்வடைந்த போதெல்லாம் புத்துணர்ச்சி கொடுத்தது, தமிழ்தான் என்னை பகைவர்களிடமிருந்தும், துரோகிகளிடமிருந்தும் தூர இரு என்று எச்சரிக்கை செய்தது. அந்தத் தமிழ்தான் என்னைக் காத்து வருகிறது.
வருகிற தேர்தலில் வெற்றி பெறுவோம், அதற்காக பாடுபடுவோம் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் உறுதியளித்துள்ளனர். அது காக்கப்பட வேண்டும், நிறைவேற வேண்டும் என்றார் கருணாநிதி.
மன்னிப்பு கேட்ட கருணாநிதி:
இதற்கிடையே மாநாட்டு வளாகத்தில் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கோரியுள்ளார் கருணாநிதி.
திமுக கூட்டணியிலிருந்து வைகோ விலகியதையடுத்து மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோவின் கட் அவுட் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதை படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பல புகைப்படக்காரர்கள் ரத்தக் காயம் அடைந்தனர். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.என். நேருவின் தலையீட்டால் புகைப்படக்காரர்கள் உயிர் தப்பினர்.
இந் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாநாட்டு வளாகத்தில் திமுகவால் வைக்கப்பட்ட வைகோவின் கட் அவுட் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டது விரும்பத்தகாத செயல். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்று. இதற்காக, நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் வருத்தம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இரு தொண்டர்கள் சாவு:
இதற்கிடையே மாநாட்டுப் பந்தலில் மின்சாரம் தாக்கியதில் திமுக தொண்டர்
ஒருவர் பலியானார். அதே போல மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு பெரம்பலூர் திரும்பிக் கொண்டிருந்த ஒரு தொண்டர் நீரில் மூழ்கி பலியானார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்ற அவர் இருட்டில் தவறி கிணற்றில் விழுந்து பலியானார்.