இத்தோட முடிச்சுக்குவோம்: பா.ம.க
சென்னை: வெற்றி கொண்டான் விவகாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். பாமகவினர் கூட்டணி தர்மத்தை மீறாத வகையில் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
வார இதழ் ஒன்றில் திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் கொடுத்த பேட்டியில், பாமக நிறுவனர் ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சகட்டமாக, கருணாநிதி ஒப்புதலின் பேரில், அண்ணா அறிவாலயத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்ட உரையைத்தான் பேட்டி என்ற பெயரில் பேசியுள்ளார் வெற்றி கொண்டான் என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர் அன்பழகன் விடுத்த பதில் அறிக்கையில், ராமதாஸின் குற்றச்சாட்டு, இழிவான கற்பனை என்று காட்டமாக கூறியிருந்தார். திமுக, பாமக இடையிலான இந்த மோதல் திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெற்றி கொண்டான் விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி உடனடியாக கண்டனம் தெரிவிக்காதது பாமகவினருக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது. அதைத்தான் நாங்கள் முதல்வரிடம் நேரில் விளக்கினோம்.
தனது பேட்டி தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாக வெற்றி கொண்டான் கூறியுள்ளார். ஆனால், பேட்டியில் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் நடவடிக்கையில் எந்த உள்நோக்கமும் கிடையாது. பாமக மற்றும் டாக்டர் ராமதாஸின் நடவடிக்கைகளில் ஒளிவுமறைவே கிடையாது.
இந்தப் பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ள பாமக விரும்புகிறது. இதை வளர்க்க விரும்பவில்லை. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டி, இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே டாக்டர் ராமதாஸின் விருப்பமும் கூட.
எனவே பாமக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், கட்சியின் பல்வேறு அணி பிரதிநிதிகள் இனிமேல் இதுதொடர்பாக எந்தக் கருத்தும் கூறக் கூடாது, போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. பிரச்சினையை மறந்து விட்டு பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்காலத்திலும், நமது சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் எது நடந்தாலும், அதுகுறித்து யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது. கூட்டணி தர்மத்தைக் காத்து அனைவரும் பொறுமையுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டும