திமுக-போலீஸ் மோதல்: மாஜி எம்எல்ஏ கைது
திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், முன்னாள் திமுக எம்.எல்.ஏவுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன, வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் கல்லாக்குழி தெருவைச் சேர்ந்தவர் விஜயன். இவர் பேருந்து நிலையம் எதிரே பூக்கடை நடத்தி வருகிறார். மாதவன் என்பவரின் எலக்ட்ரிகல் கடை முன்பு பூக்கடை வைத்துள்ளார் விஜயன். இருவருக்கும் இடையே இடப் பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
தனது கடைக்கு முன்பாக பூக்கடை வைக்கக் கூடாது என்று கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மாதவன் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே பூக்கடை அகற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு தனது கடையை கல்வீசி சேதப்படுத்தினார் விஜயன் என்று கூறி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் மாதவன். இதன் பேரில் விஜயன் கைது செய்யப்பட்டார்.
தகவல் அறிந்ததும் முன்னாள் திமுக எம்எல்ஏ சிவராமன் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். மாதவன் மீது புகார் கொடுத்த அவர் உடனடியாக அதைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக சிவராமனுக்கும், சப் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் முற்றவே, சிவராமன், திருப்பத்தூர் நகராட்சித் தலைவர் முருகன், வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
மறு நாள் காலை தகவல் பரவி சிவராமனின் ஆதரவாளர்கள் பெரும் திரளாக கூடி பேருந்து நிலையப் பகுதியில் கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்தினர். ஆட்டோக்களும் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. மினி லாரிகளும் ஓடவில்லை.
வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ராஜசேகர் கைது செய்யப்பட்டதால் அவரை விடுவிக்கும்வரை வேலைநிறுத்தப் பேராட்டத்தில் வக்கீல்கள் குதித்துள்ளனர். இதனால் திருப்பத்தூரில் பதட்டம் நிலவியது.