தீபாவளி: பஸ், ரயில்கள் 'புல்'-நெரிசலை சமாளிக்க சிறப்பு பேருந்துகள்
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி பஸ்கள், ரயில்களில் முன் பதிவு சீட்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டன. இதையடுத்து சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கவுள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ராம சுப்பிரமணியம் கூறுகையில்,
வழக்கமாக தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 188 வழித்தடங்களில் 850 பஸ்களை இயக்கி வருகிறோம். நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நவம்பர் 5,6,7,8,9,11,12 ஆகிய தேதிகளில் அனைத்தும் பஸ்களிலும் சீட்கள் முன்பதிவாகிவிட்டன.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களுக்கும் நிரம்பிவிட்டன. பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலம் பயணிகளால் பிளாக் செய்யப்பட்டுவிட்டன.
இதையடுத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், கோவை போன்ற நகர்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தேவைப்பட்டால் இதர போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சூப்பர் டீலக்ஸ் பஸ்களையும் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
பயணிகள் நெரிசலை சமாளிக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் மேலும் 2 முன்பதிவு கெளண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தாம்பரத்திலும் ஒரு சிறப்பு முன்பதிவு கெளண்டர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.