வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருப்பவர்களுக்கு மாற்று வீடு வழங்க ஜெ. கோரிக்கை
சென்னை:
கோவையில் விபத்துக்குள்ளான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆளும் திமுக அரசின் அலட்சியப் போக்கால், கோவை, உக்கடம் பகுதியில் இருக்கும் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள் அடியோடு இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த செய்தி என்னுடைய நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குடிசை மாற்று வாரியக் கட்டடங்கள் சரியான முறையில் பராமரிப்பின்றி இருந்துள்ளது. குறிப்பாக ஏஏ பிளாக்கில் மட்டும் 32 வீடுகள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது. அவ்வப்போது இந்த வீட்டு கட்டடங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்திருக்கிறது.
வீடு சேதமடைந்து வருவதை அங்கு வசிக்கும் பொதுமக்கள் பலமுறை திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இந்த குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களின் நிலைமையை அறிந்து கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்படி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நலன்கருதி அவர்களுக்கு மாற்று வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்குடன் இருந்ததன் விளைவாக இன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் இருக்கிறார்கள்.
இதற்கான முழுப் பொறுப்பையும் திமுக அரசே ஏற்க வேண்டும். உயிரிழந்த 13 பேர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அங்கு குடியிருந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடு வழங்குவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.