தேவநேயப் பாவாணர் மணி மண்டபம்-கருணாநிதி திறந்து வைத்தார்
மதுரை: மதுரையில், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழுக்காகவே வாழ்ந்தவர் தேவநேய பாவாணர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையில் பிடிப்புடன் விளங்கியவர்.
அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடு நாள் கோரிக்கை. அதை ஏற்ற முதல்வர் கருணாநிதி, மதுரை அண்ணா நகர் சாத்தமங்கலத்தில், 80 சென்ட் பரப்பளவில், ரூ. 40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்படி சாத்தமங்கலத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மணிமண்டபம் எழிலுடன் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டப வளாகத்திற்குள் தேவநேயப் பாவாணரின் 8 அடி உயர வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
மணிமண்டபத்தில் பாவாணரின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள், புகைப்படங்கள், நூல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்த மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பாவாணர் சிலைக்கு மாலையும் அணிவித்தார்.
பின்னர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில், தமிழாக இனிக்குது இந்த மணி மண்டபம் என்று எழுதி கையெழுத்திட்டார்.
மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பரிபூரணத்திடம் கருணாநிதி வழங்கினார். மேலும் பரிபூரனத்திற்கு அரசு உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவையும் முதல்வர் வழங்கினார்.