தமிழ்நாட்டில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் 17 சதவீதம் மட்டுமே உள்ள வனபரப்பை அதிகரிக்க இந்த ஆண்டு 75 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளது என்று மண்டல வனப்பாதுகாவலர் ராம்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாட்டிலேயே முன்னோடி திட்டமாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்களில் அவர்களின் அனுமதி பெற்று மரக்கன்றுகள் நடப்படும்.
இந்த மரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்த விவசாயிகளே வைத்து கொள்ளலாம். அதில் வனத்துறை உரிமை எதும் கொள்ளாது. ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சம் 2.5 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் வறட்சியை தாங்கக் கூடியதும், வேகமாக வளரக் கூடியதும், அதித மகசூல் தரக் கூடியதும், தரிசி நிலங்களில் பயிரிட தக்கமானதுமான தைலம், மலைவேம்பு, சவுக்கு, புங்கன்,வாகை, இலவம் பஞ்சு, தேக்கு, தீக்குச்சி(பெருமரம்) ஆகிய மரக்கன்றுகள் நடப்படும்.
மரங்களை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரிய மரங்கள் வளர்க்க ஏக்கருக்கு ரூ.1,500 மானியமும், ஊடு பயிராக வளர்க்கும் மரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1,000 மானியமாகவும் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுத்தப்பட உள்ள இந்திட்டத்திற்காக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டலத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதற்காக அரசு ரூ. 38.68 லட்சம் நிதி அளித்துள்ளது.
தற்போது இந்த மண்டலத்தில் 7 நர்சரிகள், 4 வன விரிவாக்க மையங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சில விவசாயிகளுக்கு மரகன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
மரம் நடும் பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டு அடுத்த 15 நாள்களில் முடிவடையும். மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் 17 சதவீதம் காடுகள் மட்டுமே உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 18.45 சதவீதமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 சதவீதமும் காடுகள் உள்ளன.
எனவே மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மரக்கன்றுகளை நட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.330 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.