கிராம மக்களுக்கு சேவை செய்ய மனம் இல்லையா? ராமதாஸ் கேள்வி
நாகர்கோவில்: நாட்டில் உள்ள 3.5 கோடி ஏழை மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ மாணவர்களுக்கு மனம் இல்லையா? குறைந்த கட்டணத்தில் படித்து விட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதுதான் அவர்களின் எண்ணமா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த செப்டம்பரில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 மாதங்கள் ஆகியும் அரசு இதுவரை கண்டுகொள்ள வில்லை. அரசு தன் கடமையிலிருந்து முற்றிலும் தவறி இருக்கிறது.
கிராமங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்து ஓடாகிப்போனவர்கள் 3.5 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவம மாணவர்களுக்கு மனமில்லையா?.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் ரூ.4,000 மட்டும் தான்.
இட ஒதுக்கீட்டின் முழுப்பலனையும் அனுபவிக்கின்றார்கள். மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு மாணவனுக்கு 5.5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் செலவாகிறது. ஆனால் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய மறுக்கின்றனர்.
கோடிக்கணக்கில் நகர்ப்புறங்களில் சம்பாதிக்கத்தான் குறைந்த கட்டணத்தில் படிக்கிறீர்களா? ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்காமல் இருக்கவா படிக்கிறீர்கள் என்று மவுனம் கலைந்த மக்கள் கேட்கிறார்கள்.
இவர்கள் சொல்வது போல ஒரு வருடம் கிடையாது. 4 மாதம் தான் கிராமத்தில் வேலை பார்க்க வேண்டும். அதற்கு ரூ.8,000 அரசு கொடுக்கிறது. மத்திய அரசின் இந்த புரட்சிகரமான திட்டத்தை மக்கள் வரவேற்கின்றனர்.
எனவே கட்டாய கிராம சேவையை ஓராண்டுக்கு பதிலாக 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். கிராமப்புறங்களில் குறைந்த பட்சம் பணி புரிந்தால் மட்டுமே பட்டமேற்படிப்பு படிக்க முடியும் என்று மருத்துவ கவுன்சில் விதிகளை மாற்ற வேண்டும்.
மகாராஷ்டிராவில் 3 வருடமும், கேரளாவில் 1 வருடமும் இது போன்ற கிராமப்புற மருத்துவ சேவை மருத்துவ மாணவர்களுக்கு உள்ளது. அவ்வாறு செய்யாதவர்கள் அரசுக்கு ரூ.15 லட்சம் கட்ட வேண்டும். மேற்கு வங்கத்திலும் இந்த சட்டம் உள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 15,500 டாக்டர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். இப்போது போராட்டம் நடத்தும் மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து காத்திருக்க வேண்டியதுதான்.
கிராமப்புற சேவை என்பது இன்னமும் சட்டமாக வரவில்லை. அதற்கு பின்னர் போராட்டம் நடத்தினால் அதில் நியாயம் இருக்கும். ஆய்வு குழு அறிக்கை கிடைத்த பின்னர் தான் அது குறித்து முடிவு செய்யப்படும்.
மின் வெட்டுக்கு வெள்ளை அறிக்கை:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை அதிகம் உள்ளது. இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
3ம் தேதி சென்னையில் பாமக செயற்குழு கூடுகிறது.இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 2006ம் சர்வாதிகார ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது அது முடிந்து விட்டது. இப்போது நாங்கள் பொறுப்புள்ள எதிர்கட்சி. 2011 வரை திமுக வேண்டாம் என்று கூறினாலும் எங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுப்போம் என்றார் ராமதாஸ்.