காட்டுமிராண்டிக் காலத்திற்கு அழைத்துச் செல்லும் ராமதாஸ் - ஆற்காடு வீராசாமி கடும் தாக்கு
சென்னை: மின் உற்பத்தி செய்யக் கூடாது, துணை நகரங்கள் கூடாது, விமான நிலைய விரிவாக்கம் கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதிக்கக் கூடாது, புதிய தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என்று பேசி வரும் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காட்டுமிராண்டிக் காலத்தைப் போல மாற வேண்டும் என நினைக்கிறார் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சில காலமாக ஓய்ந்திருந்த திமுக - பாமக மோதல் மீண்டும் வலுப் பெற்றுள்ளது. மருத்துவ மாணவர் ஸ்டிரைக் தொடர்பாக இரு கட்சிகளும் கடுமையாக அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டி கொடுத்தபடியும் இருந்தன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள மின் நிலையம் தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் மூண்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள தனியாருக்குச் சொந்தமான கடலூர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தை அமைக்கவுள்ள நபர் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உறவினர். இதனால்தான் அப்பகுதி மக்கள் எதிர்ப்பையும் மீறி அந்த மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக டாக்டர் ராமதாஸ் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு ஆற்காடு வீராசாமி காட்டமாக பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் பவர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மின் உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. அந்த நிறுவனம் தியாகவள்ளி, குடிகாடு கிராமங்களில் அனல் மின் நிலையம் அமைக்க உள்ளது. இந்த கடற்கரையோர கிராமங்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் கூட யாரும் நெல் உற்பத்தி செய்யவில்லை.
திட்டம் அமையவுள்ள இடம் விளை நிலம் அல்ல, விளைச்சலுக்கு ஏற்ற நிலமும் அல்ல. அனைத்துமே தரிசு நிலங்கள்தான்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு சொந்தம் என்று ராமதாஸ் பேசியுள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள உறவு பற்றி பாமக எம்.எல்.ஏ வேல்முருகனிடம் கேட்டால், ராமதாசுக்கு உண்மை புரியும்.
மின் உற்பத்தி செய்யக் கூடாது, துணை நகரங்கள் கூடாது, விமான நிலைய விரிவாக்கம் கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதிக்கக் கூடாது, புதிய தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என்று பேசிவரும் ராமதாஸ், தமிழ்நாடு காட்டுமிராண்டிக் காலத்தைப் போல
மாற வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால் ராமதாஸ் மட்டும் அறக்கட்டளை நிறுவி, ஏரிக்கரையின் கீழ் உள்ள 250 ஏக்கர் விளைநிலங்களில் கல்லூரியை கட்டலாம்.
கருணாநிதியின் சாதனைகளை தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களுக்கு திமுக மீது ஆத்திரமும், கோபமும் ஏற்படவேண்டும் என்பது ராமதாசின் ஆசை. ஆனால் அவரின் ஆசைக்கு யாரும் பலியாக மாட்டார்கள் என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.