தேசியக் கொடிக்குப் பதில் காங். கொடியை ஏற்றிய அதிகாரி சஸ்பெண்ட்
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், தேசியக் கொடிக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிய அரசு அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மலப்புரம் மாவட்டம் தலக்காடு என்ற இடத்தில், மாநில அரசின் விவசாயத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு உதவி அதிகாரியாக இருப்பவர் ரஷீத்.
நேற்று குடியரசு தினத்தையொட்டி இங்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு ரஷீத் கொடியேற்றினார். கூடியிருந்தவர்கள், கொடியைப் பார்த்து சல்யூட் செய்ய கையை உயர்த்தியபோது, அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பட்டொளி வீசிப் பறந்தது தேசியக் கொடி அல்ல, காங்கிரஸ் கட்சியின் கொடி.
இந்தத் தகவல் அரசுக்குப் பறந்தது. அதிர்ச்சி அடைந்த அரசு, தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக ரஷீத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி:
இதற்கிடையே, கரூர் அரசு அலுவலகம் ஒன்றில் தேசியக் கொடி தலை கீழாக ஏற்றப்பட்டது.
கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் மண்மங்கலத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான துனை மின் நிலைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
தேசியக்கொடியை ஏற்றி வைத்தவர் அக்கொடியை தலைகீழாக ஏற்றி வைத்து விட்டார். அதாவது ஆரஞ்சு நிறம் கீழேயும், பச்சை நிறம் மேலேயும் இருப்பது போல கொடி பறந்தது.
இதை கவனித்த சிலர் வேதனைப்பட்டு உடனே கலெக்டர் அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
கலெக்டர் அலுவலக்தில் இருந்து அந்த துனை மின் நிலைய அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தரப்பட்டு தேசியக் கொடியை சரி செய்தனர். தேசியக் கொடியை ஏற்றி வைத்தவர் அதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
தீயில் கருகிய தேசியக் கொடி:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், தீயில் கருகிய நிலையில் தேசியக் கொடி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது தற்செயலாகத்தான் நடந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் 59வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ஹைதராபாத் நகரின் ஹனுமன் நகர் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு தேசியக் கொடி கண்டுபிடிக்கப்பட்டது.
கொடிக் கம்பத்தில் பாதி எரிந்த நிலையில் அந்தக் கொடி காணப்பட்டது. கொடிக் கயிறு முற்றிலும் எரிந்திருந்தது.
கொடிக் கம்பத்திற்குக் கீழே தீ ஏற்பட்டு அது கயிறு வழியாக பரவியதில் கொடி எரிந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.