சட்டசபையில் இன்று பாமக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் பாமக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்து திமுகவுக்கு அதிர்ச்சியளித்தனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக உறுப்பினர் ஓமலூர் தமிழரசு, தனது தொகுதியில் நடந்த கலர் டிவி வழங்கும் விழாவில் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர் தம்மைப்பற்றி தவறாக பேசியதாக குறிப்பிட்டார்.
இந்த கருத்து அமைச்சர் மீது நேரடியாக குற்றம்சாட்டும் வகையில் இருப்பதாலும், இதற்கு பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் சபையில் இல்லாததாலும் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், எனது கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் குற்றச்சாட்டை கூறுவதால் அதை சபைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, துணைத் தலைவர் ஆறுமுகம், கொறடா வேல்முருகன் ஆகியோர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்றும், அங்கு நடந்த சம்பவத்தை தகவலாக சொல்வது மரபு மீறிய செயலாகாது என்றும் எனவே அவைக் குறிப்பிலிருந்து தமிழரசுவின் கருத்தை நீக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.
அனைத்து பாமக எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று கொண்டே இருந்தனர்..
ஆனாலும் நான் என் முடிவை சொல்லி விட்டேன். அதில் மாற்றம் இல்லை என சபாநாயகர் திட்டவட்டமாகக் கூறவே அமைச்சர்களுக்கும், பா.ம.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் குரல் எழுப்பியவாறு பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ், பாமக ஆதரவுடன் தான் திமுக கூட்டணி ஆட்சியை நடத்தி வருவது குற்ப்பிடத்தக்கது. நேற்று காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இந் நிலையில் இன்று பாமக வெளிநடப்பு செய்துள்ளது.
இம் முறை திமுக ஆட்சிக்குப் வந்தபின் இந்த இரு கட்சிகளும் வெளிநடப்பு செய்வது இதுவே முதன்முறையாகும்.












Click it and Unblock the Notifications