நக்சலைட் நடமாட்டம் அதிகரித்து விட்டது - ஜெ. புகார்

இது குறித்து இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது ஆட்சிக் காலத்தில் காட்டுக் கொள்ளையன் வீரப்பன், இமாம்அலி மற்றும் நக்சலைட் அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் விளைவாக தமிழகத்தில் தொழில்கள் வளர ஆரம்பித்து தமிழகம் அமைதிப் பூங்காவாக காட்சி அளித்தது. ஆனால் கருணாநிதி ஆட்சி பொறுப் பேற்றதிலிருந்து அதற்கு நேர்மாறான செயல்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் ஆயுதக்காடாக மாறி வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக 29.3.2008 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி தாசம்பட்டி இடையே பாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11.25 மணிக்கு கடந்து சென்ற சில நிமிடங்களில் கேரிகப்பள்ளி ரெயில்வே கேட்டிற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.
பின்னர், இது குறித்து நடைபெற்ற விசாரணையில், ரெயில் தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில் கம்பியால் கட்டப்பட்டிருந்த 13 டெட்டனேட்டர் குச்சிகளில் 6 டெட்டனேட்டர் குச்சிகள் வெடிக்கப்பட்டதும் மீதமுள்ள 7 குச்சிகள் வெடிக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெட்டனேட்டர் குச்சிகள் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த குண்டு வெடிப்பில் நக்சலைட்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனது ஆட்சிக்காலத்தில் இதே இடத்தில் தான் நக்சலைட் அமைப்பின் தலைவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். மேலும், நக்சலைட் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை இந்த மாவட்டத்தில் அறவே ஒழிக்கும் வண்ணம் இந்த பகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்சாலை துவக்கப்பட்டது. ஆனால் கருணாநிதி எதை மனதில் வைத்து மேற்படி பணியை கைவிட்டார் என்று தெரியவில்லை.
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதலமைச்சரே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது மகனுக்கு உதவி செய்வதால் தான் தீவிரவாதிகள் தமிழ்நாட்டை தங்களுடைய புகலிடமாக கருதுகிறார்கள்.
கருணாநிதியின் சட்டவிரோத நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள், தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை மேலும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தற்போது கிருஷ்ணகிரி அருகே ரெயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் திமுக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications