பிரதமராக வேண்டும் என்று ஆசையில்லை-விஜய்காந்த்

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் தேமுதிக அலுவலகத்தை திறந்து வைத்தார் விஜயகாந்த். இந் நிகழ்ச்சியில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மைத்துனரும், இளைஞர் அணி செயலாளருமான சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,
மத்திய ஆட்சியில் தேமுதிக பங்கு வகிக்க வேண்டும் என்றோ, பிரதமராக வேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. (எவ்ளோ பெரிய மனசு!!!).
நாங்கள் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வேளை தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியாக இருந்தால் அதனுடன் கூட்டணி குறித்துப் பேசலாம்.
ஆனால் மக்களுக்கு நல்லது செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, பிற கட்சிகளாக இருந்தாலும் சரி எழுத்துப்பூர்வாக எழுதித் தர வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக முல்லைப் பெரியாறு, பாலாறு, ஓகனேக்கல் என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழக மக்களின் நலன்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
நாங்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக தேவையாக இருந்தால் மட்டுமே போராட்டம் நடத்துகிறோம். சட்டசபையில் நான், பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேசிய பிறகுதான் பஸ் கட்டணத்தை குறைத்தனர். முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் பேசுவதே இல்லை.
டி.ஆர்.பாலு விவகாரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதியே தருவதில்லை.
எனக்கு எத்தனையோ சோதனைகள் தந்தார்கள். ஆனால் எத்தனை சோதனைகளை அவர்கள் கொடுத்தாலும் அதை சமாளிப்பேன். வெற்றி பெறுவேன்.
சினிமாவில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சுகாதார அமைச்சர் அன்புமணி கூறி வருகிறார். மது, புகை இருக்கட்டும். முதலில் அரசு மருத்துவமனைகளில் நிலவும் அவலங்களை அவர் சரி செய்ய முயலட்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல பிரச்சினைகள், குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய அவர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
திருவள்ளூரில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. அதற்கு என்ன காரணம் என்பதை அவர் கண்டுபிடிக்கட்டும். இதுபோன்ற அவலங்களை சரி செய்ய அவர் கவனம் செலுத்தட்டும். ஒரு அமைச்சராக அவர் இதைத்தான் முதலில் செய்ய வேண்டும். பிறகு மற்றவை பற்றிக் கவலைப்படட்டும் என்றார் விஜயகாந்த்.
தனது இந்த டெல்லி பயணத்தின்போது சரத்பவார் உள்ளிட்ட தேசியத் தலைவர்களை விஜயகாந்த் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications