ஓகேனக்கல்: கர்நாடக அனுமதி தேவையில்லை-இல.கணேசன்
சென்னையில் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்தவரை ஜீரோ பாயிண்டுக்கு மேல் உள்ள பகுதியாக இருந்தால்தான் கர்நாடகாவிடம் அனுமதி கேட்க வேண்டும். ஜீரோ பாயிண்டுக்கு பிறகு உள்ள பகுதியில் திட்டத்தை நிறைவேற்ற நாம் கர்நாடகாவிடம் அனுமதி கேட்க தேவையில்லை.
தற்போது கர்நாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வந்து விட்டது. எனவே இனி ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் கருணாநிதி விரைந்து செயல்பட வேண்டும்.
கர்நாடகத்தி்ல் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட வாட்டாள் நாகராஜ் தோல்வி அடைந்தது நல்ல அறிகுறி. அங்கு பாஜக பெற்றுள்ள வெற்றியால் தமிழக பாஜகவுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். கர்நாடக தேர்தல் முடிவு சோனியா தலைமைக்கு எதிரான தீர்ப்பாகும். ராகுல் காந்திக்கு நாட்டில் செல்வாக்கு கிடையாது.
ஒசூரில் அடுத்த மாதம் 20,21ம் தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது.
இலங்கையில் அமைதி திரும்ப இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்பது எங்களது கருத்து. அங்கு விடுதலைப் புலிகளை அடக்குவதாக கூறி பொதுமக்கள் மீது தாக்குகிறார்கள். மனித உரிமைகளை மீறும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஆனால் ஐ.நாவில் உள்ள மனித உரிமை குழுவில் இலங்கையை சேர்க்க இந்தியா முயற்சிக்கிறது என்றார்.
பாஜக தடையாக இருக்க கூடாது: சரத்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இனியும் காலம் தாழ்த்தாமல் ஓகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
தேசிய நலனில் அக்கறையுள்ள கட்சியாக பாஜக திகழ்கிறது என்ற பெருமை அடைய வேண்டும் என்றால், தேர்தல் அரசியலை மட்டுமே மனதில் கொண்டு ஓகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையை மாற்றி, தமிழக மக்களின் நலனையும் மனதில் கொண்டு இத்திட்டம் நிறைவேறுவதில் எந்த ஒரு தடையாகவும் அக்கட்சி விளங்கக் கூடாது.
இவையெல்லாவற்றையும் மீறி, நமக்கு உரிமையுள்ள ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு இனியும் எந்த மெத்தனமோ, தயக்கமோ காட்டக்கூடாது.
அதற்காக முதல்வர் கருணாநிதி, பிரதமரை வலியுறுத்தி அவருக்கு உடனே கடிதம் எழுத வேண்டும். மேலும் இந்த திட்டத்துக்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக அறிவித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.