ஓகேனக்கல்-காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம்-எதியூரப்பா
டெல்லி: ஓகேனக்கல் மற்றும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்துள்ள எதியூரப்பா அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி மற்றும் ஓகனேக்கல் திட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும்.. கர்நாடக மாநில நலன்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டடாது. அனைத்துப் பிரச்சினைகளிலும், கர்நாடகத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும்.
சட்டசபையில் பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும்.
கர்நாடகத்தின் கலாச்சாரம், மொழி, நிலம், நீர்வளம் ஆகியவற்றில் எந்த வகையிலும் சமரசத்திற்கு இடமில்லை. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே எந்த வகையான சமரசத்தையும் நாங்கள் செய்து
கொள்ள மாட்டோம்.
யாருடனும் நான் மோதல் போக்கில் ஈடுபட மாட்டோன். மாறாக ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிப்பேன். வளர்ச்சிப் பாதையில் அனைத்துக் கட்சிகளையும் இட்டுச் செல்ல முயற்சிப்பேன்.
எனது ஆட்சியில் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபடுவேன். இதுதொடர்பான புகார்களுக்கு எனது அரசு உயர்ந்தபட்ச முக்கியத்துவம் அளிக்கும்.
வாஜ்பாய் அரசின் வளர்ச்சி திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு அவற்றை கர்நாடகத்திலும் நாங்கள் நிறைவேற்றுவோம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 2020 கொள்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதை எங்களது வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்கப் போகிறோம். இன்று மாலை அப்துல் கலாமையும் நான் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். சட்டம் தனது கடமையைச் செய்யும்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் சில பிரச்சினைகள் உள்ளன. அவை ஓரிரு நாளில் சரி செய்யப்படும்.
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை பலம் இல்லை. எனவேதான் அனைத்து சுயேச்சைகளுக்கும் அமைச்சர் பதவி தர நேரிட்டது. அவர்களது ஆதரவு எங்களுக்கு அவசியமானது. முதல்வர் என்பவர் ராஜா போலவும், அமைச்சர்கள் வேலைக்காரர்கள் போலவும் நான் நினைக்கவில்லை.
ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் எனது அரசின் முடிவுகள் அமையும். அனைவரையும் கலந்து பேசித்தான் எதையும் தீர்மானிப்போம்.
வளர்ச்சி அடைந்த, வலுவான, உறுதியான கர்நாடகத்தை உருவாக்க அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவேன்.
பெங்களூர் நகர வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். பெங்களூர் நகரை வளர்ச்சி அடைந்த, சர்வதேச நகரமாக மாற்றுவோம். உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும் என்றார் எதியூரப்பா.
முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை எதியூரப்பா சந்தித்துப் பேசினார். துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியையும் அவர் சந்தித்தார். மாலையில் பிரதமரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.