ஈவ் டீசிங், பிக் பாக்கெட்டுகளுக்கு எதிராக பெண் போலீஸ் படை
சென்னை: சென்னை நகரில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர், பிக் பாக்கெட் திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது, மாறு வேடத்தில் உலா வரும் பெண் போலீஸ் படை.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற சேகர், ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை ஒடுக்க புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தார். அதன்படி, சுடிதாரில் பெண் போலீஸாரை மாறு வேடத்தில் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த சாதாரண உடை பெண் போலீஸார், ஈவ்டீசிங்கில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்களை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பெண் போலீஸாரின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கடந்த இரு வாரங்களில் மட்டும் ஈவ் டீசிங் செய்ததாக 400 பேர் சிக்கியுள்ளனர். முதலில் பிடிபடுபவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். ஆனால் திரும்பவும் மாட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மகளிர் கல்லூரிகள், நகரின் முக்கிய இடங்களில் ஈவ் டீசிங் குறித்து போலீஸாருக்குத் தகவல் தரலாம் என தெரிவிக்கும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஈவ் டீசிங் செய்து பிடிபடுவோருக்கு ரூ. 10 ஆயரம் அபராதம், ஒரு வருடம் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஈவ் டீசிங் செய்ததாக கைதானவர்களில் சிவக்குமார் என்பவர் மிக மோசமாக நடந்து கொண்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பெண்களை கிண்டல் செய்து சிக்கிய மாணவர்கள் எச்சரித்து விடப்பட்டுள் ளனர். அவர்கள் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீண்டும் இதே தவறை செய்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை பிடிக்க அமைக்கப்பட்ட பெண் போலீஸ் படைக்கு வெற்றி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது பிக் பாக்கெட் பேர்வழிகளையும் பிடிக்க பெண் போலீஸார் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த போலீஸாரும் சுடிதார்களில்தான் வலம் வருகின்றனர்.
சப்- இன்ஸ்பெக்டர்கள் ரேகா, அமீர்ஜான் ஆகியோர் தலைமையில் தலைமை காவலர்கள் வீரமுத்து, அக்பர் ஆனந்தவேல் ஆகிய ஆண் காவலர்களும், பொற்கொடி, ரேணுகா, தனலட்சுமி, சுமதி ஆகிய பெண் காவலர்களும் இன்று வடசென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்கள் மற்றும் பொது இடங்களில் மாறு வேடத்தில் சென்று பிக்பாக்கெட் திருடர்களை வேட்டையாடினார்கள்.
பெண் போலீசார் சுடிதார் அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவண்ணாரப்பேட்டை லட்சுமிபுரத்தில் இருந்து தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு மாநகர பஸ்சில் சென்ற பயணி ஒருவரிடம் 90 ரூபாய் பிக்பாக்கெட் அடித்த காசிமேடு விஜயன், புது வண்ணாரப்பேட்டை மணிராஜ் ஆகியோர் சுடிதார் படை பெண் போலீசாரிடம் சிக்கினர்.
இது போல பூக்கடை பஸ் நிலையத்தில் கணேசன் என்பவரிடம் நூறு ரூபாய் திருடிய பாபு, சந்திரகுமார் ஆகியோரும் போலீசாரிடம் சிக்கி னார்கள். பிடிபட்ட அனை வரும் பல முறை கைதான பிக்பாக்கெட்' திருடர்கள் என்று தெரிய வந்தது.
இது தவிர மிண்ட் பகுதியில் பெண்களை கிண்டல் செய்த மோகன் (18), ராஜு (18) ஆகியோரையும் சுடிதார் பெண் போலீசார் கைது செய்தனர்.
சென்ட்ரலில் புகார் பெட்டி:
இதற்கிடையே, பெண்களை கேலி செய்வோர் குறித்து புகார் செய்ய வசதியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகார்ப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தங்களை கிண்டல் செய்பவர்கள், தொல்லை கொடுப்பவர்கள் குறித்து
பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த பெட்டியில், புகார் எழுதி போட்டால் குறிப்பிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்யேக தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.
99625-00500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த புகார் பெட்டிகள் படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.