குழப்பத்தை கூட்ட விரும்பவில்லை: கருணாநிதி
டெல்லி நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் சரியா அல்லவா என்பதை விட அந்தப் பிரச்சினை பற்றிய விவாதத்தின் காரணமாக இந்தியாவில் அமைந்துள்ள அரசின் நிலைத்தன்மைக்கு ஊனம் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில்தான் எனது முழுக் கவனமும், சிந்தனையும் இருந்தது.
விபரீத விளைவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள்தான் மத்திய அரசிலும், அதனை ஆதரிக்கும் இடதுசாரி அணியிலும் இருந்தவர்கள், இருப்பவர்கள்.
சுமூக நிலை உருவாவற்குதிமுக சார்பில் நான் எடுத்த முயற்சிகள் இடை இடையே பலிப்பது போல தோன்றினாலும்,இறுதியாக வெற்றி பெற முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.
இயக்கங்களின் கவுரவத்தை விட தேச ஒற்றுமையே முக்கியம். அதன் உறுதிப்பாடும், ஒற்றுமையும் காக்கப்பட இன்னும் அவகாசம் இருக்கிறது. இது நான் அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்றார் கருணாநிதி.
இடதுசாரிகளின் முடிவால் உங்களுக்கு அவர்கள் மீது கோபமோ, குறையோ இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஏற்பட்டு விட்ட நிலைமைக்காக வருத்தப்படுகிறேன், ஆனால் தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தக் கட்சியின் மீதோ எனக்கு வருத்தமோ,கோபமோ, குறையோ கிடையாது என்றார்.
இடதுசாரிகளின் முடிவு குறித்து பிரகாஷ் காரத் தனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார் என்றும், நடந்தது நடந்து விட்டது. இனி மதக் கலவரங்களுக்கு இடம் தராமல் பார்த்துக் கொள்வோம் என்று தான் கூறியதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பினரையும் (காங், இடதுசாரிகள்) இணைக்கும் வகையில் தனது முயற்சிகள் தொடரும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
டெல்லியில் தற்போது ஏற்பட்டு விட்ட நிலைகாரணமாக தனது டெல்லி பயணத்திற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டதாக தெரிவித்த முதல்வர், டெல்லி நிலை தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை, ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் நிலை:
ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்த கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், வருந்தத்தக்க நிகழ்ச்சியாக அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
கண்டித்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமூகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமருடைய கையில்தான் உள்ளது என்றார்.
மேலும், சில விஷயங்களை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
'குழப்பத்தை கூட்ட விரும்பவில்லை':
இந் நிலையில் இன்று செய்தியாளர்கள் இடதுசாரிகளின் ஆதரவு வாபஸ் குறித்து மீண்டும் கருணாநிதியிடம் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ஏற்கனவே தங்களது முடிவுக்கான காரணத்தை இடதுசாரிகள் தெளிவாக கூறி விட்டனர். அதற்கு மேல் நானும் எதையாவது கூறி குழப்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை.
டெல்லி அரசியல் நிலவரம் குறித்து நேற்றே நானும் தெளிவாக எனது கருத்தை தெரிவித்து விட்டேன். இதற்கு மேல் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நிலைமை அப்படியேதான் உள்ளது.
இடதுசாரிகளின் விலகலால் மத்திய கூட்டணிக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நான் கருதவில்லை. இது மதவாத சக்திகளுக்கு எதிராக திரண்ட மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த தோல்வியாகவும் நான் கருதவில்லை என்றார் கருணாநிதி.