சைக்கோ கொலைகாரனைப் பிடிக்க சென்னையில் விடிய விடிய ரோந்து
சென்னை: சென்னை வட பழனி பகுதியில் அடுத்தடுத்து நடந்துவரும் மர்மக் கொலைகளுக்கு காரணமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்க போலீஸார் தொடர்ந்து விடிய விடிய இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வடபழனியில் அடுத்தடுத்து மர்ம கொலைகள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் இதுவரை 5 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில், பழைய பேப்பர் பொறுக்கும் வாலிபர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனால் வட பழனி, மாம்பலம் உள்ளிட்ட பகுதி மக்களிடையே பெரும் பயமும், பீதியும் நிலவுகிறது.
இது சென்னை போலீஸாருக்கு பெரும் சவாலான வழக்கு. கொலையாளியை நிச்சயம் பிடிப்போம் என மாநகர காவல்துறை ஆணையர் சேகர் கூறியுள்ளார.
இதைத்தொடர்ந்து துணை கமிஷனர்கள் மவுரியா, முத்துசாமி, ஸ்ரீதர் நேரடி மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள சேது, விஜயராகவன், மனோகரன், கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
வடபழனி, மாம்பலம், தி.நகர் ஆகிய இடங்களில் இரவு முழுவதும் தனிப் படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற ரோந்தில் 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மன நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் தவிர மற்றவர்களிடம் முகவரி பெறப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதேபோன்று நேற்றும் தனிப்படை போலீசார் நள்ளிரவு ரோந்தில் ஈடுபட்டனர். காரணமின்றி சுற்றித் திரிபவர்கள், குடித்துவிட்டு வருபவர்கள், பிச்சைக்காரர்கள், பிளாட்பாரத்தில் தூங்குபவர்கள் ஆகிய அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
வடபழனி தவிர நகரின் பல பகுதிகளிலும் இந்த விடிய விடிய இரவு நேர ரோந்து மற்றும் விசாரணை நடைபெற்றது. இதுதொடரும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications